மும்பை: கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மற்றும் இந்தியாவில் இந்திய அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. தொலைக்காட்சியில் ஐபிஎல் தொடர் மட்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அதிரடி மாற்றமாக 2025 ஜனவரி மாதம் முதல் இந்திய அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகிய அனைத்து முக்கிய கிரிக்கெட் போட்டிகளும் ஹாட் ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பப்படும் எனவும், ஜியோ சினிமா அதன் பின்பு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பாது எனவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், டிஸ்னி இந்தியா நிறுவனத்தை வாங்கி இருப்பது தான். சுமார் 71,455 கோடி கொடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் டிஸ்னி இந்தியாவை வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இனி இந்த இரண்டு நிறுவனமும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கீழ் வியாகாம் 18 என்ற மீடியா நிறுவனமும், ஜியோ சினிமா என்ற நிறுவனமும் இயங்கி வருகின்றன.
வியாகாம் 18 நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது. ஜியோ சினிமா மொபைல் ஸ்ட்ரீமிங் ஆப்'பாக செயல்பட்டு வருகிறது. இதை அடுத்து ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா நிறுவனங்களின் இணைப்புக்கு பின் மொத்தம் 120 தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இந்தியாவின் இரண்டு முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களான ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகியவை ஒரே நிறுவனமாக செயல்பட உள்ளன.
கிரிக்கெட் போட்டிகளை ஹாட்ஸ்டார் சிறப்பாக ஒளிபரப்பி வந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜியோ சினிமாவில் ஐபிஎல் தொடர் ஒளிபரப்பப்பட்டாலும் அதில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், வீடியோ தரமும் சரியாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது.
அதே சமயம் ஹாட்ஸ்டாரில் நேரலையில் ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளின் தரம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். ஜியோசினிமாவை விட ஹாட்ஸ்டாரிடம் கிரிக்கெட் நேரலை ஒளிபரப்புக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பதால் இனி அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.
வரும் ஜனவரி 2025க்குள் இந்த மாற்றம் நடைபெறும் என்பதும், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் நடந்தால் 2025 ஐபிஎல் தொடரை ஹாட்ஸ்டாரில் தான் இந்திய ரசிகர்கள் பார்க்க முடியும்.