கொல்கத்தா: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஷமிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பெங்கால் அணியின் தலைமைப் பயிற்சியாளர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா, இந்தியத் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ராவுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. அவர் அடுத்து டி20 தொடரிலும், டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்க இருப்பதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்றொரு மூத்த வேகப் பந்துவீச்சாளரான ஷமிக்கு இடம் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதற்கு மாறாக முகமது ஷமி புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
முகமது ஷமி புறக்கணிக்கப்பட்டது குறித்துப் பேசிய லக்ஷ்மி ரத்தன் சுக்லா, தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். "முகமது ஷமிக்குத் தேர்வுக் குழுவினர் இழைத்திருப்பது மாபெரும் அநீதி. சமீபகாலமாக ஷமியைப் போல எந்த ஒரு முன்னணி சர்வதேச வீரரும் உள்ளூர் போட்டிகளில் இவ்வளவு அர்ப்பணிப்புடன் வந்து விளையாடியதில்லை.
காயத்திலிருந்து மீண்டு வந்து, உள்ளூர் போட்டிகளில் அவர் கடினமாக உழைத்தும், தேர்வுக் குழு அவரை நடத்திய விதம் வெட்கக்கேடானது. ஒரு மூத்த வீரருக்குச் செய்யும் மரியாதை இதுவல்ல" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முகமது ஷமி அணியில் சேர்க்கப்படாததற்குக் காரணம் 'உடற்தகுதி' என்று கூறப்பட்டாலும், களத்தில் அவரது செயல்பாடுகள் வேறாக உள்ளன. இந்திய அணி அறிவிக்கப்பட்ட அதே நாளில் (சனிக்கிழமை), அசாம் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் ஷமி அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பேட்டிங்கிலும் கலக்கிய அவர் ஆட்டமிழக்காமல் 25 ரன்களையும் எடுத்தார். சமீபத்திய 5 போட்டிகளில் அவர் 22.27 என்ற சராசரியுடன் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் அகர்கர் தலைமையிலான குழு, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது. ஷமிக்கு இன்னும் முழுமையான 'மேட்ச் பிட்னஸ்' இல்லை என்று காரணம் கூறப்பட்டாலும், அவர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதை ஏன் தேர்வுக் குழு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதே சுக்லாவின் கேள்வியாக உள்ளது.
உள்ளூர் போட்டிகளில் தன்னை நிரூபித்தும் இந்திய அணியின் கதவுகள் திறக்காதது, ஷமி மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.