மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, வருகிற 2026 ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராகத் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில், அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என செய்தி வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், நியூசிலாந்து தொடரிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவர் அணியில் இடம் பெற்றிருந்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கே.எல். ராகுல் அல்லது சஞ்சு சாம்சன் போன்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
கடைசியாக 2024 ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் ரிஷப் பண்ட் விளையாடினார். தற்போது டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி வரும் அவரை, நியூசிலாந்து தொடரில் சேர்ப்பதில்லை எனத் தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக, ஜார்க்கண்ட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பவுள்ளார். இஷான் கிஷனைத் தேர்வு செய்ய முக்கிய காரணங்கள் அவரது அபார ஃபார்ம் என கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்து, ஜார்க்கண்ட் அணிக்கு முதல் முறையாகக் கோப்பையை வென்று கொடுத்தார்.
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில், கர்நாடகாவுக்கு எதிராக வெறும் 33 பந்துகளில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இவரது அதிரடி ஆட்டத்தைப் கருத்தில் கொண்டு 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இவருக்கு ஏற்கனவே இடம் கிடைத்துள்ளது. கடைசியாக 2023 உலகக் கோப்பையின் போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இஷான் கிஷன் ஒருநாள் போட்டியில் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில், கழுத்து வலி காரணமாகத் தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவரே இந்திய அணியை வழிநடத்துவார்.
இந்தத் தொடர் 2026 ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 11 - கோட்டாம்பி மைதானம், வதோதரா.
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 14 - நிரஞ்சன் ஷா மைதானம், ராஜ்கோட்.
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 18 - ஹோல்கர் மைதானம், இந்தூர்.
இந்தத் தொடருக்கான அதிகாரப்பூர்வ அணி அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.