மும்பை: காயத்திலிருந்து மீண்டு இந்திய அணிக்குத் திரும்பவுள்ள நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், விமான நிலையத்தில் ஒரு ரசிகரின் நாயிடம் கடிபடுவதிலிருந்து நூலிழையில் தப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு களம் காணும் அவருக்கு, நியூசிலாந்து தொடருக்கு முன்பாக இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அவரைச் சூழ்ந்த ரசிகர்கள் ஆட்டோகிராஃப் மற்றும் செல்ஃபி கேட்டுக்கொண்டிருந்தனர். ரசிகர்களின் அன்புக்கு மதிப்பளித்து அவரும் ஆட்டோகிராஃப் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, பெண் ரசிகை ஒருவர் தனது கையில் ஒரு சிறிய நாயை வைத்திருந்தார். அந்த நாயைப் பார்த்ததும் ஆசையாக அதன் தலையைத் தடவிக் கொடுக்க ஸ்ரேயாஸ் ஐயர் கையை நீட்டினார். ஆனால், அந்த நாய் திடீரென அவரை நோக்கிக் கடிக்கப் பாய்ந்தது.
சற்றும் எதிர்பார்க்காத இந்தத் தாக்குதலால் திடுக்கிட்ட ஸ்ரேயாஸ் ஐயர், மின்னல் வேகத்தில் தனது கையை விலக்கிக் கொண்டார். "ஜஸ்ட் மிஸ்" என்பது போலச் சிரித்துக்கொண்டே அவர் அங்கிருந்து நகர்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. "காயத்திலிருந்து இப்பதான் மீண்டு வந்திருக்கார், அதுக்குள்ளயுமா?" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவேளை நாய் கடித்து இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரால் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட முடியாமல் போயிருக்கும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு மண்ணீரலில் காயம் ஏற்பட்டது. இதனால் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழு உடற்தகுதியை நிரூபிப்பதற்காக விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடினார்.
ஹிமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 34 பந்துகளில் 45 ரன்களும் விளாசித் தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் அணிக்குத் திரும்பியதால், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இவரது வருகை ருத்துராஜ் கெய்க்வாட்டுக்குப் பாதகமாக முடிந்துள்ளது.
4-வது இடத்தில் களமிறங்கி சதமடித்திருந்தாலும், அந்த இடம் ஸ்ரேயாஸ் ஐயருடையது என்பதால், ருத்துராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் சுப்மன் கில் மீண்டும் அணிக்குத் திரும்பியதால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.