மும்பை: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதியை நிரூபிக்காமல் போனால் வாய்ப்புக்காகக் காத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் சூழல் இருந்தது. ஆனால், தற்போது அந்த வாய்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
வரும் ஜனவரி 11ம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்த அணியில், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஸ்ரேயாஸ், அதன்பின் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இதனால், "உள்ளூர் போட்டியில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்" என்று பிசிசிஐ கறாராகக் கூறியிருந்தது.
ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதி பெறத் தவறினால், அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட மகாராஷ்டிர கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார். ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 105 ரன்கள் அடித்திருந்தார். அதுமட்டுமின்றி, தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையிலும் உத்தரகண்ட் அணிக்கு எதிராக 124 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக 66 ரன்களும் குவித்து உச்சகட்ட ஃபார்மில் உள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் விலகினால் ருதுராஜுக்கு வாய்ப்பு உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்காகச் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், காயத்தின் சுவடு சிறிதுமின்றி ருத்ரதாண்டவம் ஆடிய அவர், வெறும் 53 பந்துகளில் 82 ரன்களை விளாசித் தள்ளினார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த அதிரடி ஆட்டம் மும்பை அணிக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ஸ்ரேயாஸ் முழு உடற்தகுதியுடன் இருப்பதாலும், அவரே அணியின் துணை கேப்டன் என்பதாலும், அவர் நேரடியாக வதோதரா சென்று இந்திய அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது.
இதனால், சதம் அடித்தும், உள்ளூர் போட்டிகளில் ரன்களைக் குவித்தும் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அணியில் இடம்பிடிக்க முடியாமல் வெளியே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. "மிகவும் அரிதான சூழலில் மட்டுமே ருதுராஜ் உள்ளே வர முடியும்" எனத் தேர்வுக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.