மும்பை: இந்திய அணியின் ஒருநாள் போட்டித் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, பிசிசிஐ தரப்பிலிருந்து ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் நிலைமை என்ன என்று பிசிசிஐ அதிகாரி அளித்த விளக்கம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 11-ம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேருவார் என்றும், அதற்கு முன்னோட்டமாக ஜனவரி 3 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறும் விஜய் ஹசாரே ட்ராபி போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடுவார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால், இந்தச் செய்திகளை பிசிசிஐ வட்டாரம் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. இதுபற்றி பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்து உண்மையை உடைத்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஸ்ரேயாஸ் ஐயர் இந்த வாரம் முதல் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். அவர் நல்ல நிலையில் இருக்கிறார். ஆனால், அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரால் ஒரு 50 ஓவர் போட்டியில் முழுமையாக ஃபீல்டிங் செய்ய முடியுமா என்பதை நாங்கள் சோதிக்க வேண்டும். அதன் முடிவைப் பொறுத்தே அவர் விஜய் ஹசாரே தொடரில் ஆடுவாரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
பேட்டிங் செய்வதில் அவருக்குச் சிக்கல் இல்லை என்றாலும், 50 ஓவர்கள் களத்தில் நின்று ஃபீல்டிங் செய்வது அவரது காயத்திற்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதே மருத்துவர்களின் கவலையாக உள்ளது.
கடந்த அக்டோபர் 25-ம் தேதி சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின் போது, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை டைவ் அடித்து பிடிக்க முயன்றார் ஸ்ரேயாஸ். அப்போது அவரது மண்ணீரலில் பலத்த காயம் ஏற்பட்டு, உள் இடுப்புப் பகுதியில் ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதற்காக அவர் ஆஸ்திரேலியாவிலேயே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. உயிருக்கு ஆபத்தான அந்தக் காயத்திலிருந்து மீண்டு, தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (CoE) அவர் மறுவாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மும்பை அணி வரும் ஜனவரி 3-ம் தேதி மகாராஷ்டிராவுடனும், ஜனவரி 6-ம் தேதி இமாச்சல பிரதேசத்துடனும் மோதவுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியுடன் ஃபீல்டிங் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவர் களமிறங்குவார். இல்லையெனில், நியூசிலாந்து தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் தான். அவசரப்பட்டு அவரை களமிறக்கி மீண்டும் காயத்தில் சிக்க வைக்க பிசிசிஐ விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.