மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த ஒருநாள் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி :
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடி சதம் விளாசி ஹர்திக் பாண்டியா ஃபார்முக்கு திரும்பியிருந்தாலும், அவர் ஒருநாள் தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கான காரணத்தை பிசிசிஐ தெளிவாக விளக்கியுள்ளது. "தேசிய கிரிக்கெட் அகாடமியிடமிருந்து (COE), ஒரு போட்டியில் முழுமையாக 10 ஓவர்கள் வீசுவதற்கான உடற்தகுதிச் சான்றிதழை ஹர்திக் பாண்டியா இன்னும் பெறவில்லை. அடுத்து வரவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரைக் கருத்தில் கொண்டு, அவரது பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக அவருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது" என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கும் பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முகமது ஷமி அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் தேர்வாகவில்லை.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை முகமது சிராஜ் அணியை வழிநடத்துவார். அவருடன் இளம் வீரர்களான ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்களாக கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தொடர்கின்றனர். இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வருவதால், வீரர்களின் காயங்களைத் தவிர்க்கவும், பணிச்சுமையைக் குறைக்கவும் பிசிசிஐ இந்த மாறுபட்ட அணியைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல் ஆகியோர் நியூசிலாந்து தொடருக்கான ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதே போல, சஞ்சு சாம்சனுக்கும் ஒருநாள் அணியில் இடம் அளிக்கப்படவில்லை.