பெங்களூர்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அந்த 3 வீரர்கள் தான் காரணம் என்று கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ஓரூர்க்கின் பவுலிங், ரச்சின் ரவீந்திரா - டிம் சவுதியின் பேட்டிங் வெற்றியை தேடி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது. 1988ஆம் ஆண்டிற்கு பின் முதல்முறையாக நியூசிலாந்து இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி இருப்பதால், ரசிகர்களிடையே ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடைசியாக நியூசிலாந்து அணி இந்திய அணியில் வென்ற போது, பும்ரா பிறக்கவே இல்லை.

இதனால் நியூசிலாந்து அணியின் சாதனை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே இந்திய அணியை வீழ்த்தியுள்ளன. தற்போது நியூசிலாந்து அணியின் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இதற்கு அந்த அணியின் கேப்டன் டாம் லேதமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து டாம் லேதம் பேசுகையில், டாஸ் வென்றால் நாங்களும் பேட்டிங் செய்யலாம் என்றே முடிவு செய்திருந்தோம். ஆனால் டாஸை இழந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. சரியான பந்துகளை வீசி இந்திய அணியை குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய முடிந்தது. நிச்சயம் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் கம்பேக் கொடுக்கும் என்பதை அறிந்திருந்தோம்.
ஆனால் எங்களின் பவுலர்கள் புதிய பந்தில் சிறப்பாக செயல்பட்டு பதிலடியை கொடுத்தனர். அதேபோல் முதல் இன்னிங்ஸில் ரச்சின் ரவீந்திரா மற்றும் டிம் சவுதி இருவரின் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு கூடுதல் சாதகத்தை அளித்தது. இளம் வேகப்பந்துவீச்சாளரான ஓரூர்க் சர்வதேச கிரிக்கெட்டை சிறப்பாக தொடங்கியுள்ளார். அவரின் பவுலிங்கில் நல்ல வேகம், பவுன்ஸ் இருக்கிறது.
காற்றில் அவரால் ஸ்விங் செய்ய முடிகிறது. டிம் சவுதி மற்றும் மேட் ஹென்றி இருவரும் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஓரூர்க்கின் பவுலிங்கை வலைப்பயிற்சியில் விளையாடுவதே கடினமாக உள்ளது. அதேபோல் டிம் சவுதியால் பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பதை நன்றாக அறிவோம். ரச்சின் ரவீந்திராவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்.
கடந்த 12 மாதங்களில் அவரின் ஆட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் அவரின் கிளாஸ் என்ன என்பதை வெளிப்படையாக காட்டினார். ஓய்வறையில் இருந்த பதற்றத்தை ரச்சின் ரவீந்திரா அவரின் பேட்டிங் மூலமாக எளிதாக மாற்றிவிட்டார் என்று பாராட்டியுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது ரச்சின் ரவீந்திராவிற்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.