மும்பை: நியூசிலாந்து வீரர் வில் யங் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி பற்றி பேசிய போது, தங்கள் கனவில் கூட இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் 3 - 0 என வெற்றி பெறுவோம் என நினைக்கவில்லை என கூறி இருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 3 - 0 என வென்ற நிலையில், தொடர் நாயகனாக வில் யங் அறிவிக்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல், மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய மூவரும் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர்.

ஆனால், அவர்கள் மூவரும் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கு தனித்தனியே காரணமாக இருந்தனர். எந்த ஒரு போட்டியிலும் தனிப்பட்ட முறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வில் யங்கிற்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. அது பற்றியும், இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது பற்றியும் ஊடகம் ஒன்றில் பேசிய வில் யங் இந்திய அணிக்கு எதிரான வெற்றி பற்றி நியூசிலாந்து வீரர்கள் எப்படி நினைக்கிறார்கள் என விவரித்தார்.
"இந்திய அணிக்கு எதிராக 3 - 0 என்ற கணக்கில் வெல்வோம் என நாங்கள் எங்கள் கனவிலும் நினைக்கவில்லை. இது மிகவும் அற்புதமானது. புனே டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றிய பின் நாங்கள் ஹோட்டலுக்கு செல்ல ஒரு மணி நேரம் பேருந்தில் பயணம் செய்தோம். அப்போது பேருந்தில் இருந்த ஒலி பெருக்கியில் பாடல்களை ஒலிக்க விட்டு ஒவ்வொருவரும் அதை பாடிக் கொண்டே சென்றோம். அது மிகவும் நன்றாக இருந்தது."
"எனக்கு தொடர் நாயகன் விருது அளித்தது வேடிக்கையாகவும் உள்ளது. இரண்டு அணிகளை சேர்ந்தவர்களும் தொடர் முழுவதும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு அணிகளை சேர்ந்தவர்களும் சதம் அடித்து இருக்கிறார்கள். சிலர் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்கள். சில நட்சத்திர வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்."
"ஆனாலும், எனக்கு தொடர் நாயகன் விருது கிடைத்ததற்கு காரணம் நான் மூன்று போட்டிகளிலும் ஓரளவு ரன் சேர்த்தது தான் என நினைக்கிறேன். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஆட்டத்தின் போக்கை எங்கள் அணிக்கு சாதகமாக கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்."
"இடையே ஒரு விக்கெட் அல்லது இரண்டு விக்கெட் வீழ்ந்தால் அதனால் பிரச்சனை ஏற்படும். எனவே, சிறிய கூட்டணியாக இருந்தாலும், 30 - 40 ரன்கள் சேர்த்தாலும் அது களத்தில் எங்கள் வீரர்களுக்கு சற்று ஆசுவாசத்தை அளிக்கும். விக்கெட்களை மொத்தமாக இழக்காமல் இருப்பதன் மூலம் இன்னிங்சை கட்டமைக்க முடியும். கூட்டணியை உருவாக்க முடியும். அதை ஒவ்வொரு முறையும் நான் பேட்டிங்கின் போதும் செய்ய முயன்றேன்." என்றார் வில் யங்.