நியூசிலாந்து தொடர்
இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 5 - 0 என அபாரமாக வென்றது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் 3 - 0 என படுதோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பலவீனங்கள் குறித்த விமர்சனம் எழுந்தது.
டெஸ்ட் தொடர்
இந்த நிலையில், இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி ஆகும். எனவே, இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம் வென்று தீர வேண்டும்.
சுழற் பந்துவீச்சாளர்கள்
டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு சுழற் பந்துவீச்சாளரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் இடையே போட்டி நிலவுகிறது. இவர்களில் யார் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்விக்கு பயிற்சிப் போட்டியில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரோஹித் இல்லை
அதே போல, அணியில் துவக்க வீரர் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. அவர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அதனால், மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வாலுடன் டெஸ்ட் போட்டியில் துவக்கம் அளிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
துவக்கம் யார்?
துவக்க வீரராக ப்ரித்வி ஷா அல்லது ஷுப்மன் கில் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இவர்கள் இருவரில் யார் டெஸ்ட் அணியில் இடம் பெறப் போகிறார்கள் என்பதை பயிற்சிப் போட்டியில் முடிவு செய்ய திட்டமிட்டு இருந்தது இந்திய அணி.
பயிற்சிப் போட்டி
ஆனால், நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில் என மூவரும் மோசமாக ஆட்டமிழந்து அணியை 5 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றனர்.
அதிர்ச்சி அளித்த துவக்க வீரர்கள்
ப்ரித்வி ஷா 4 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அடுத்து 13 பந்துகளை சந்தித்த மயங்க் அகர்வால் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நான்காம் வரிசையில் களமிறங்கிய ஷுப்மன் கில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
மயங்க் அகர்வால் நிலை
ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் டக் அவுட் ஆனதை விட, அதிக கவலை அளிப்பதாக இருந்தது மயங்க் அகர்வால் தான். அவர் கடந்த டெஸ்ட் போட்டிகளில் நல்ல பார்மில் இருந்தாலும், நியூசிலாந்து ஒருநாள் தொடரில் மிக மோசமாக ஆடினார். பயிற்சிப் போட்டியிலும் ஏமாற்றம் அளித்துள்ளார்.
அதிகரித்த குழப்பம்
இந்த நிலையில், இந்த மூவரில் எந்த இரண்டு துவக்க வீரர்களை ஆட வைப்பது என்ற குழப்பம் அதிகரித்துள்ளது. நன்றாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வாலும் சொதப்பி இருப்பதால் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கிறது.
புஜாரா - விஹாரி நம்பிக்கை
பயிற்சிப் போட்டியில் மூன்று துவக்க வீரர்களும் கை விட்டாலும், புஜாரா - ஹனுமா விஹாரி ஜோடி சிறப்பாக ஆடி அணியை மீட்டது. புஜாரா, விஹாரி இருவரும் அரைசதம் கடந்து தொடர்ந்து நிதானமாக ரன் குவித்தனர். முன்னதாக ரஹானே 18 ரன்னில் அவுட் ஆனார்.