புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய ரசிகர்கள் கடும் கோபம் கொண்டனர். அதனால் மைதான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் எழுந்தன.
இந்தப் போட்டியின் முதல் நாள் அன்று நல்ல வெயில் அடித்தது. புனே மைதானத்தில் மேற்கூரை இல்லை என்பதால் ரசிகர்கள் வெயிலில் அமர்ந்து போட்டியை பார்த்து வந்தனர். முதல் இடைவேளையின் போது ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக மைதானத்தில் இருந்த கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்றனர்.

ஆனால், அங்கு தண்ணீர் கையிருப்பில் இல்லை. அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் கடும் கோபம் கொண்டனர். சில ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்று அங்கிருந்த கடைகளில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி வந்தனர். அவர்களை மீண்டும் உள்ளே அனுமதிக்க முடியாது என மைதான பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கும் வாக்குவாதம் எழுந்தது.
விதிப்படி டிக்கெட் வாங்கி இருந்தாலும் ஒருமுறை மைதானத்தை விட்டு வெளியே சென்று விட்டால் மீண்டும் அதே டிக்கெட்டை வைத்து மைதானத்திற்குள் வரக்கூடாது. அதனால், மைதான பாதுகாவலர்கள் வெளியே சென்ற ரசிகர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே இருந்த ரசிகர்கள் ஆவேசம் அடைந்து மகாராஷ்டிரா கிரிக்கெட் அமைப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
வெளியே வாட்டர் பாட்டில் ஏற்றி வந்த லாரி நகரின் முக்கிய சாலையில் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டது தான் வாட்டர் பாட்டில்கள் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் என பின்னர் மகாராஷ்டிரா கிரிக்கட் அமைப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அத்துடன் உடனடியாக அருகே இருந்து நூற்றுக்கணக்கான வாட்டர் பாட்டில்களை வாங்கி கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிய ரசிகர்களுக்கு இலவசமாக அளித்து அப்போதைக்கு நிலைமையை சமாளித்தனர்.
அதனால் கோஷம் எழுப்பிய ரசிகர்கள் கலைந்து சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் வாட்டர் பாட்டில் ஏற்றி வந்த லாரி மைதானத்திற்குள் வந்தது. அதனால் நிலைமை கட்டுக்குள் அடங்கியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி படுமோசமான பேட்டிங் சரிவை சந்தித்தது. 103 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது.