அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று முன்னதாக சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.கடந்த இரண்டு ஆட்டங்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை சற்றே தவறவிட்ட சாம்சனுக்கு, இந்த இறுதிப் போட்டியில் அதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சரை எதிர்கொண்டது போல, நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றியை அவர் ஆரம்பத்திலேயே தாக்க வேண்டும் என்றும் அஸ்வின் வலியுறுத்தினார். இது குறித்து பேசிய அவர், "சஞ்சு நிச்சயம் ரன் குவிப்பார். அவருக்கு இன்னும் ஒரு அதிரடி ஆட்டம் வரவேண்டியுள்ளது. அவர் இரண்டு சதங்களை சற்றே தவறவிட்டார்."

"நியூசிலாந்துக்கு எதிராக அவர் சதம் அடிக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சரை அவர் கையாண்டது போல, மேட் ஹென்றியை அவர் எதிர்கொண்டால் அதுவே போதும்," என்று அஷ்வின் தெரிவித்தார்.இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், இந்திய வீரர்கள் தங்களையே அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொண்டால், அது நியூசிலாந்துக்கு இந்தியாவைத் தோற்கடிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதையும் அஷ்வின் சுட்டிக்காட்டினார்.

நியூசிலாந்தின் அதிரடித் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலனின் அச்சுறுத்தல் குறித்தும் ரவிச்சந்திரன் அஷ்வின் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஃபின் ஆலனுக்கு இடது கை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகச் சிலசமயம் சிக்கல் உண்டு. ஆனால் அரையிறுதியில் ஜான்செனுக்கு எதிராக சிறப்பாக ஆடினார். அதையும் பும்ராவையும் கடந்துவிட்டால், அது அவர்களுக்குப் பெரும் உத்வேகத்தைத் தரும் என நியூசிலாந்து கருதும்."
"முக்கியமாகப் பார்க்க வேண்டியது, இந்திய சுழற்பந்துவீச்சை, அது அக்சர் படேலோ அல்லது வருணோ, நியூசிலாந்து வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான். இந்த விஷயங்களில் நியூசிலாந்து பொதுவாக மிகவும் கூர்மையான அணி," என்றார். இறுதிப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடிக்க நியூசிலாந்துக்கு அனைத்தும் சாதகமாக அமைய வேண்டும் என அஷ்வின் கணித்தார். நியூசிலாந்து முதலில் பந்துவீச வேண்டும் என்றும், டாஸ் இந்திய அணிக்குப் பெரியளவில் முக்கியத்துவம் பெறாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

"வெற்றி பெற வேண்டுமானால், நியூசிலாந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஒரு சிறப்பான பவர்ப்ளேவை ஆட வேண்டும். நான் நியூசிலாந்து கேப்டனாக இருந்தால், முதலில் பந்துவீசி, களத்தின் சூழலைப் பயன்படுத்திக் கொள்வேன். டாஸ் வென்றால் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். உண்மையில், டாஸ் கூட இந்தியாவுக்குத் தேவையில்லை. இந்த அசைக்க முடியாத இந்திய அணியை எதிர்கொள்ள நியூசிலாந்துக்கு அனைத்தும் சாதகமாக அமைந்தால் மட்டுமே வெல்ல முடியும்" என்று அஷ்வின் தெளிவுபடுத்தினார்.