பெங்களூர்: நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இதை அவர் தனது தாத்தா, பாட்டியின் ஊரான பெங்களூரில் செய்தது மேலும் சிறப்பான ஒன்றாக அவருக்கு அமைந்தது. அவர் இந்திய வம்சாவளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது தந்தை பெங்களூரை சேர்ந்தவர். பின்னர் அவர் பணியின் காரணமாக நியூசிலாந்திற்கு சென்று விட்டார். அங்கு வளர்ந்த ரச்சின் ரவீந்திரா தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இடையில் விக்கெட் சரிவை சந்தித்த போதும் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆடியது. டெவான் கான்வே 105 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து இருந்தார். வில் யங் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் வரிசையாக வெளியேறினர்.
ஆனால், நான்காம் வரிசையில் இறங்கிய ரச்சின் ரவீந்தரா நிலையாக ஆடியதுடன், விரைவாக ரன் சேர்த்தார். அவர் 124 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது இரண்டாவது டெஸ்ட் சதம் ஆகும். மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன் நியூசிலாந்து அணி 81 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் இழந்துள்ளது. டிம் சவுத்தி அதிரடி ஆட்டம் ஆடி 49 ரன்கள் குவித்து இருந்தார்.
நியூசிலாந்து அணி உணவு இடைவேளையின் போது இந்திய அணியை விட 299 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. குறைந்தபட்சம் இந்திய அணி டிரா செய்ய முயலுமா?