பெங்களூரு: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த நிலையில் அந்த அணியின் இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்தரா இந்திய அணியில் இரண்டு வீரர்கள் தான் தங்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை அளிப்பார்கள் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அந்த இரண்டு வீரர்களில் ரோஹித் சர்மாவோ, விராட் கோலியோ அல்லது பும்ராவோ இல்லை. அந்த இருவர் சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 500 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா 300 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார். இந்திய ஆடுகளங்களில் இருவருமே எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள்.

இருவரும் நீண்ட காலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று வருகிறார்கள். மறுபுறம் நியூசிலாந்து அணி சுழற் பந்துவீச்சாளர்களை சந்திப்பதில் அதிக சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்தது. இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை சந்திக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அடுத்து இந்தியாவிலும் அஸ்வின், ஜடேஜா போன்ற அனுபவ சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலில் உள்ளது நியூசிலாந்து அணி. இது பற்றி பேசிய ரச்சின் ரவீந்திரா, "இந்திய அணியில் நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் பந்து வீசும் ஆற்றல் உடைய இரண்டு பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சாதனைகளை படைத்த பந்து வீச்சாளர்கள். அவர்கள் பேட்டிங்கும் செய்வார்கள். அது எங்களுடைய பணியை மேலும் சிக்கலானதாக மாற்றும்." என்றார்.
மேலும், "அவர்களுக்கு எதிராக இந்திய சூழ்நிலையில் ஆடுவது சரியான சவாலாக இருக்கும். இந்திய மண்ணில் இந்திய அணியின் டெஸ்ட் ரெக்கார்டை பார்க்கும் போது அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினம் என்பதை புரிந்து கொள்ளலாம். இந்தியா எந்த அளவுக்கு தரமான அணி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், நியூசிலாந்து அணியில், நாங்கள் எதிரணியை பற்றி அதிகம் கவலைப்பட மாட்டோம். எங்கள் ஆட்டத்தை ஆடினால், அதை நீண்ட நேரத்திற்கு சரியாக செய்தால் நாங்கள் வெற்றி பெறுவோம்." என்றார் ரச்சின் ரவீந்திரா.