மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார். அதில் 2 விக்கெட்டுகள் கேரம் பால் மூலமாக வீழ்த்தப்பட்டது எப்படி என்பது குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணி போராடி வருகிறது. இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் திணறினார். ஆனால் 2வது இன்னிங்ஸில் கேரம் பால் மூலமாக நியூசிலாந்து அணியை திணறடித்தார். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், நியூசிலாந்து அணியின் டேரல் மிட்சல் கொடுத்த கேட்சை அபாரமாக பிடித்து அசத்தினார்.
இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்திற்கு பின் அஸ்வின் பேசுகையில், டேரல் மிட்சல் கொடுத்த கேட்சை பிடிக்க ஓடிய போது, பந்துக்கு அருகிலாவது செல்ல வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன். அதேபோல் எனது கைகளில் பந்து சிக்கினால் எப்போதும் விட்டதில்லை. அதனால் நம்பிக்கையுடன் கைகளை நீட்டி முயற்சித்தேன். அந்த கேட்சை பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கேரம் பாலை பொறுத்தவரை, இந்தப் போட்டியை இரண்டாக பிரித்து கொள்ளலாம்.
பெவிலியன் முனையில் இருந்து பந்துவீசும் போது பந்து நன்றாக சென்றது. ஆனால் மறுமுனையில் இருந்து பவுலிங் செய்யும் போது வித்தியாசமாக சென்றது. கொஞ்சம் பிளாட்டாக சென்றது. பவுன்ஸ் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதனை கணித்த போது, வேறு மாதிரி பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்தேன். அந்த முனையில் இருந்து பவுலிங் செய்தால், பேட்ஸ்மேன்களால் என்னை எளிதாக விளாச முடியும் என்றும் நினைக்க வாய்ப்புகள் இருந்தது.
இருந்தாலும் அதனை முயற்சிக்க விரும்பினேன். அந்த முனையில் இருந்து பவுலிங் செய்தால் கூடுதலாக சில ரன்களை விட்டுக் கொடுக்க நேரிடும். ஆனால் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு ரன்னும் ஆட்டத்தை நிர்ணயிக்கும். அதனால் கேரம் பாலை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை திணறடிக்க முடிந்தது. கேரம் பாலை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். அதேபோல் மும்பை பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் இல்லை. வழக்கத்திற்கும் குறைவாக ஸ்லோவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.