புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிவ்யூ எடுப்பதா? வேண்டாமா? என அஸ்வின் மற்றும் ரோஹித் விவாதித்த போது சர்ஃபராஸ் கான் அதுபற்றி பேச வந்தார். அப்போது அவரை விலகி நிற்குமாறு கோபமாக சைகை செய்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் நடப்பதற்கு சில ஓவர்களுக்கு முன்புதான் சர்ஃபராஸ் கான் ஒரு ரிவ்யூ முடிவை சரியாக கணித்து ரிவ்யூ கேட்குமாறு கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்டு இருந்தார். அது வெற்றிகரமாகவும் இருந்தது. அதன் மூலம் அஸ்வினுக்கு இரண்டாவது விக்கெட் கிடைத்து இருந்தது. இந்த நிலையில், மீண்டும் சர்ஃபராஸ் கான் ரிவ்யூவில் உதவ வந்த போது அஸ்வின் அவரை விலகி இருக்குமாறு கூறினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. வேகப் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையில் அஸ்வின் அதிக ஓவர்களை வீசினார். அவர் முதல் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். இதில் இரண்டாவது விக்கெட்டாக வில் யங் சிக்கினார். இந்தியா ரிவ்யூ கேட்டதால் மட்டுமே வில் யங் ஆட்டமிழந்தார்.
அப்போது அஸ்வின் வீசிய பந்து வில் யங் கிளவுஸில் லேசாக உரசியது. அவுட் கேட்ட போது அம்பயர் அவுட் தர மறுத்தார். அதனால் ரிவ்யூ கேட்பது குறித்து கேப்டன் ரோஹித் ஆலோசனையில் இறங்கினார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை என்றார். அதனால், ரிவ்யூ கேட்பதா? வேண்டாமா? என ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் குழப்பத்தில் இருந்தனர்.
அப்போது லெக் திசையில், பேட்ஸ்மேன் அருகே ஃபீல்டிங் நின்று இருந்த சர்ஃபராஸ் கான், தனக்கு சத்தம் கேட்டதாகவும், ரிவ்யூ செய்யலாம் என்றும் சொன்னார். கோலியும் அதை வலியுறுத்தினார். அதன் பின்னரே ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்டார். அது வெற்றிகரமாகவும் இருந்தது. இந்த சம்பவம் நடந்து சில ஓவர்களுக்குப் பின் மீண்டும் இதே போன்ற ஒரு குழப்பம் ஏற்பட்டது.
அப்போது எல் பி டபிள்யூ -வுக்கு ரிவ்யூ கேட்கலாமா? வேண்டாமா? என ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் விவாதித்து வந்தனர். அப்போது இடையே சர்ஃபராஸ் கான் நுழைந்து தனது கருத்தை சொல்ல முயன்றார். அப்போது அஸ்வின் விலகி நிற்குமாறு சைகை செய்தார். இது சரியா? அல்லது போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப அஸ்வின் இப்படி நடந்து கொண்டாரா? என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.