IND vs NZ: 105 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் செய்யாத விஷயம்.. கம்பீர் செய்த குளறுபடி.. என்ன நடந்தது?
மும்பை: ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் நிலையில், அதில் ஒரு முறை கூட பத்தாம் வரிசையில் பேட்டிங் செய்ததில்லை. முதன் முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பத்தாம் வரிசை பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். இந்த குளறுபடிக்கு பயிற்சியாளர் கம்பீர் தான் காரணம் என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டாம் வரிசை பேட்ஸ்மேனாகவே அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 83 டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் எட்டாம் வரிசை பேட்ஸ்மேனாக இறங்கி 1977 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதன் பேட்டிங் சராசரி 26.01 ஆகும். எட்டாம் வரிசையில் தான் அஸ்வின் நான்கு சதம் மற்றும் ஏழு அரை சதங்களை அடித்து இருக்கிறார்.

ஆறாம் வரிசை வீரராக சில சமயம் பேட்டிங் செய்து இருக்கிறார். அதில் அவர் 531 ரன்கள் எடுத்து இருக்கிறார். அதன் பேட்டிங் சராசரி 35.40 ஆகும். ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்து இரண்டு டெஸ்ட் சதங்களை அடித்து இருக்கிறார். இதற்கு முன் அவர் மிகக் குறைந்த பேட்டிங் வரிசையில் இறங்கியது என்றால் அது ஒன்பதாம் வரிசைதான்.
இடையே 20 இன்னிங்ஸ்களில் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்து இருக்கிறார். முதன்முறையாக தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பத்தாம் வரிசையில் பேட்டிங் செய்தார். அப்போது 13 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசையில் பலரும் தங்கள் இடத்தை மாற்றி களமிறங்கினர். முகமது சிராஜை நான்காம் வரிசையில் நைட் வாட்ச்மேனாக இறக்கினார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். அதிக பந்துகளை சந்திக்க முடியாத சிராஜை நைட் வாட்ச்மேனாக அனுப்பியது தவறான முடிவாக அமைந்தது. அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் முன்னிலை பெற்றது.


Click it and Unblock the Notifications