மும்பை: ரவிச்சந்திரன் அஸ்வின் ஈகோ காயப்படுத்தப்பட்டதாக தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதனால் அவரது உடல்மொழி மாறி விட்டதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்திய அஸ்வின், இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார். ஆனால், அவர் அதிக ரன்களை விட்டு கொடுத்து இருந்தார். அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் ஒரு விக்கெட் கூட விழ்த்தவில்லை.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்களும், ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர். சக சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட் வீழ்த்தும் நிலையில், அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் இதுவரை மூன்று விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இது பற்றி பேசிய தினேஷ் கார்த்திக், அஸ்வின் விராட் கோலி போன்றவர் இல்லை என்றாலும், அவரது ஈகோ காயப்படுத்தப்பட்டதால் அவர் வெகுண்டு எழுந்து இருக்கிறார் என சுட்டிக்காட்டினார்.
இது பற்றி தினேஷ் கார்த்திக் கூறுகையில், "அஸ்வினின் உடல் மொழியில் ஒரு மாற்றத்தை நான் பார்த்தேன். அஸ்வினை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவர் விராட் கோலி போல ஆக்ரோஷத்தை முகத்தில் காட்டமாட்டார். ஆனால், சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற முடிவில் அவர் இருந்தால் அவரது உடல் மொழி வேறு மாதிரியாக இருக்கும்." என்றார்.
மேலும், "அதனால் தான் அவர் முதல் விக்கெட் வீழ்த்திய உடன் அப்படி கொண்டாடினார். இந்த தொடரில் முதல்முறையாக நான் அவரிடம் அந்த உடல் மொழியை பார்த்தேன். அவர், "இனியும் அமைதியாக இருக்கக் கூடாது. நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும்." என்ற இடத்திற்கு சென்று விட்டார். அவரது சிறப்பான ஆட்டத்திற்கு அருகே கூட அவர் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால், அவரது ஈகோ காயப்படுத்தப்பட்டதால் ஒரு பந்துவீச்சாளராக விக்கெட் வீழ்த்தியவுடன் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்." என்றார் தினேஷ் கார்த்திக்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்து இருந்தது இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி இதுவரை 171 ரன்கள் எடுத்து 9 விக்கெட்களை இழந்து இருக்கிறது. தற்போது வரை 143 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது நியூசிலாந்து விரைவில் அனைத்து விக்கெட்களையும் இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.