மும்பை: நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸை கேரம் பால் மூலமாக விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தரமான கம்பேக்கை கொடுத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2024ல் மட்டும் அஸ்வின் 3வது முறையாக ஒரு இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காமல் பெவிலியன் திரும்பி இருக்கிறார். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபார்மில் இல்லை என்று சில விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி 28 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் தொடங்கிய 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்த இன்னிங்ஸில் அஸ்வினின் கம்பேக் மரண மாஸாக அமைந்தது. 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறிய போது, ரச்சின் ரவீந்திரா களம் புகுந்தார். அப்போது அஸ்வின் அட்டாக்கில் கொண்டு வரப்படடர். அந்த வீசிய பந்தை ரச்சின் ரவீந்திரா டவுன் தி டிராக் இறங்கி வந்து அட்டாக் செய்ய முயற்சித்தார்.
ஆனால் அந்த பந்து ரச்சினை ஏமாற்றி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைகளுக்கு சென்றது. உடனடியாக ஸ்டம்பிங் செய்யப்பட, ரச்சின் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தப் போட்டியில் அஸ்வின் வீழ்த்தும் முதல் விக்கெட் இதுவாக அமைந்தது. தொடர்ந்து வந்த கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார். 33வது ஓவரை வீசிய அஸ்வினின் பந்தில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பிலிப்ஸ் விளாசினார்.
இதன்பின் 5வது பந்தை அஸ்வின் கேரம் பாலாக வீச, அந்த பந்து லெக் ஸ்டம்ப் லைனில் பிட்சாகி ஆஃப் ஸ்டம்பை தூக்கி சென்றது. இது அஸ்வினுக்கு மரண மாஸ் கம்பேக்காக அமைந்தது. இதற்கிடையே ஜடேஜா பந்தில் மிட்சல் சிக்ஸ் அடிக்க அடித்த பந்தை, பின் நகர்ந்தவாறே அஸ்வின் பிடித்த கேட்ச் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. 38 வயதிலும் அஸ்வின் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்படுவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.