பெங்களூர்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் கடைசி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை சிஎஸ்கே அணி ரச்சின் ரவீந்திரா பயிற்சி பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது.
செப்டம்பர் மாதம் முதல் நியூசிலாந்து அணியின் ஆசிய சுற்றுப்பயணம் தொடங்கியது. நொய்டாவில் நடந்த ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவுக்கு வந்தது. இதன்பின் நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை பயணித்தது.

அந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தாலும், நியூசிலாந்து அணிக்காக விளையாடிய வீரர்களில் ரச்சின் ரவீந்திரா தான் அதிக ரன்களை விளாசி இருந்தார். மொத்தமாக 4 இன்னிங்ஸ்களில் 153 ரன்களை சேர்த்திருக்கிறார். இதன்பின் இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்றுள்ளது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடந்து வரும் சூழலில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை விளாசியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக ரச்சின் ரவீந்திரா அமைந்துள்ளார். 157 பந்துகளில் 4 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 134 ரன்களை ரச்சின் ரவீந்திரா விளாசி இருக்கிறார். இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் மூவரையும் பொளந்து கட்டினார்.
இந்திய ஸ்பின்னர்களை இவ்வளவு சாதாரணமாக ரச்சின் ரவீந்திரா எதிர்கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஸ்வீப் ஷாட் மட்டுமல்லாமல் டிஃபென்ஸிலும் அசத்தலாக செயல்பட்டார். பந்து வீசுவதற்கு முன்பாகவே எந்த ஷாட்டிற்கும் முயலாமல் ரச்சின் ரவீந்திரா கவனமாக செயல்பட்டிருந்தார். இதனை எப்படி செய்தார் என்று பலருக்கும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு சிஎஸ்கே அணி முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் திறமையை கொண்டிருந்த ரச்சின் ரவீந்திராவுக்கு மன உறுதியை அதிகரிக்கும் வகையில் சிஎஸ்கே அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் கடைசி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை ரச்சின் ரவீந்திரா தனது சக அணி வீரராக பென் சியர்ஸ் உடன் இணைந்து சென்னையில் உள்ள சிஎஸ்கே அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.