
இந்தியா தோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றது.

ஆடுகளம்
இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் சேஸிங் செய்ய எளிதான ஆடுகளம் என கூறப்பட்டது. அதனால், நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் டாஸ் வென்ற உடன் சற்றும் யோசிக்காமல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இது இந்திய அணிக்கு முக்கிய பின்னடைவாக அமைந்தது.

இந்தியா பேட்டிங்
இந்திய அணி 350 ரன்களுக்கும் மேல் குவித்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலையில், கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 103, ராகுல் 88 ரன்கள் குவிக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.

பந்துவீச்சு சொதப்பல்
348 ரன்கள் என்ற இலக்கு பெரியது என்றாலும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். பும்ரா மட்டுமே 10 ஓவர்கள் வீசி குறைவாக 53 ரன்கள் கொடுத்து இருந்தார். மற்ற நால்வரும் மத்திய ஓவர்களில் ரன்களை அள்ளிக் கொடுத்தனர்.

ஷர்துல் தாக்குர்
வேகப் பந்துவீச்சாளர்களில் ஷர்துல் தாக்குர் அதிகபட்சமாக 9 ஓவர்களில் 88 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இவரது பந்துவீச்சை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக கணித்து 4 சிக்ஸர்கள் விளாசினார். இவரை ஏன் அணியில் தேர்வு செய்தார் கேப்டன் கோலி? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

நவ்தீப் சைனி
வேகப் பந்துவீச்சாளர்களில் இளம் வீரரான நவ்தீப் சைனி டி20 போட்டிகளில் அதிக வேகத்தில் பந்து வீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணற வைத்தார். தாக்குரின் மோசமான ஆட்டத்தால், நவ்தீப் சைனியை ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேதார் ஜாதவ் தேர்வு
அதே போல, கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்பதால் ஆல் - ரவுண்டர் என்ற பெயரில் தேர்வு செய்யப்பட்டார் கேதார் ஜாதவ். அவரது பேட்டிங் குறித்த விமர்சனம் முன்பு இருந்த நிலையில், இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடி 15 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ஆனால், கேப்டன் கோலி அவரை அவசியமான நேரத்தில் பந்துவீச அழைக்கவில்லை.

வாரி வழங்கிய குல்தீப்
சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அதிக அளவில் ரன்களை வாரிக் கொடுத்தார். ஒரு விக்கெட் வீழ்த்தினாலும், அவரது பந்துவீச்சை எந்த சிரமமும் இன்றி எதிர்கொண்ட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் 10 ஃபோர், 1 சிக்ஸ் அடித்தனர். 10 ஓவர்களில் 84 ரன்கள் கொடுத்தார் குல்தீப்.

ஆறாவது பந்துவீச்சாளர் எங்கே?
குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சை, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தோரணம் கட்டி தொங்க விட்ட நிலையிலும், கோலி அவரிடமே பந்தை கொடுத்து வீசச் செய்தது அதிர்ச்சி அளித்தது. ஆறாவது பந்துவீச்சாளர் கேதார் ஜாதவ்வுக்கு அந்த நேரத்திலும் பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை. பின், ஏன் ஜாதவ் அணியில் தேர்வு செய்யப்பட்டார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புதிய துவக்க வீரர்கள்
ரோஹித் சர்மா, தவான் அணியில் இல்லாத நிலையில், புதிய துவக்க வீரர்களாக களம் கண்ட ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் பெரிய அளவில் ரன் குவிக்காததால் இந்திய அணி முதல் 25 ஓவர்களை நிதானமாகவே ஆடியது. அது பேட்டிங்கில் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.


Click it and Unblock the Notifications