பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இதற்கு ரிஷப் பண்ட் அடித்த 107 மீட்டர் சிக்ஸ் தான் காரணம் என சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர். பண்ட் அடித்த சிக்ஸ் மைதானத்தின் மேற் கூரையை தாண்டி சென்றது.
அதனால் போட்டியில் நடந்த சிறிய மாற்றம் இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டதாக சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், அது தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமா? இது குறித்து விரிவாக பார்க்கலாம். டெஸ்ட் போட்டிகளில் முதல் நாளின் துவக்கத்தில் புதிய பந்து அளிக்கப்படும்.

அந்த பந்தை 80 ஓவர்கள் வரை பந்து வீசும் அணி பயன்படுத்த வேண்டும். இடையே பந்து சேதமடைந்தாலோ அல்லது சிக்ஸ் அடிப்பதன் மூலம் மைதானத்தின் மேற்கூரையிலோ அல்லது மைதானத்தை விட்டு வெளியே சென்றாலோ மீண்டும் புதிய பந்து அளிக்கப்படும். புதிய பந்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியும் என்பதால் ஒவ்வொரு பந்து வீசும் அணிக்கும் அது பெரிய வாய்ப்பாக இருக்கும்.
அது போன்ற ஒரு சம்பவம் தான் ரிஷப் பண்ட்டால் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 600 ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் நிலவியது.
அதை உணர்ந்து சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி வந்தனர். சர்ஃபராஸ் கான் 100 ரன்களை தாண்டிய நிலையில் பந்து சேதமடைந்ததால் புதிய பந்தை அம்பயர்கள் அளித்தனர். அதை நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பயன்படுத்தினர். அவர்கள் வீசிய பந்தை சர்ஃபராஸ் கான் மற்றும் பண்ட்டால் எளிதாக அணுக முடியவில்லை.
அவர்கள் இருவரும் நிதானித்து ஆடினர். எனினும், சர்ஃபராஸ் கான் 150 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில், பந்து ஆறு ஓவர்கள் வரை வீசப்பட்டதால் அதன் பொலிவை சற்று இழந்திருந்தது. அதை பயன்படுத்தி ரிஷப் பண்ட் இமாலய சிக்சர் ஒன்றை அடித்தார்.
107 மீட்டர் தூரம் சென்ற அந்த சிக்ஸ் சின்னசாமி மைதானத்தின் மேற் கூரையில் சிக்கிக் கொண்டது. அந்த பந்தை எடுக்க முடியாததால் மீண்டும் புதிய பந்தை அம்பயர்கள் அளித்தனர். 39 பந்துகள் வரை வீசப்பட்டதால் முந்தைய பந்து பேட்டிங் செய்ய சற்று எளிதாக மாறி இருந்தது. ஆனால், ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸ்-ஆல் மீண்டும் புதிய பந்து தேர்வு செய்யப்பட்டது.
இரண்டாவது தேர்வு செய்யப்பட்ட புதிய பந்தில் ரிஷப் பண்ட் தானே முதல் நபராக வீழ்ந்தார். அதன் பின் கே எல் ராகுல், அஸ்வின், ஜடேஜா, பும்ரா என இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். ஒருவேளை ரிஷப் பண்ட் அந்த இமாலய சிக்ஸரை அடிக்காமல் இருந்திருந்தால் இந்திய அணி ரன் சேர்க்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். எனினும், அதனால் மட்டுமே இந்திய அணி தோல்வி அடைந்தது என கூற முடியாது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனதே தோல்விக்கு முக்கிய காரணம்.