பெங்களூர்: இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் ஃபிட்னஸ் உடன் இருப்பதற்காக புதிய சமையல்காரர் ஒருவரை பணிக்கு அமர்த்தி உள்ளதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதற்காக ரிஷப் பண்ட் உதவியுள்ளதாக கூறிய சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் அபாரமாக விளையாடி 150 ரன்களை விளாசியது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அவரது இடத்தில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

நம்பர் 4 வரிசையில் பேட்டிங் செய்த சர்ஃபராஸ் கான், முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகினார். ஆனாலும் மனம் தளராமல் 2வது இன்னிங்ஸில் அதிரடி சதம் அடித்து இந்திய அணியில் தனது தேர்வுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கானை நீக்க முடியாத நிலைக்கு இந்திய அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.
இருந்தாலும் சர்ஃபராஸ் கானின் ஃபிட்னஸ் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திற்கு முன்பாக சர்ஃபராஸ் கான் ஃபிட்னஸில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்திய அணியின் ஃபிட்னஸ் பயிற்சியாளருடன் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அதேபோல் ரிஷப் பண்ட் தரப்பில் சர்ஃபராஸ் கானுக்கு உதவியாக ஒரு சமையல்காரர் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் சர்ஃபராஸ் கானின் உணவு பழக்கங்களை கையாள்வார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கு முன்பாக உடலமைப்பில் சிறந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் முக்கியமானது என்பதை சர்ஃபராஸ் கானும் உணர்ந்திருக்கிறார். அதற்கான பயிற்சியில் சர்ஃபராஸ் கான் தீவிரமாக உள்ளார். அதேபோல் அவரின் உடல் பருமனாக இருந்தாலும், அசால்ட்டாக 450 பந்துகளை விளையாடக் கூடியவர். ரஞ்சி டிராபியில் 2 முறை முச்சதம் விளாசி இருக்கிறார். அவரிடம் திறமை இருக்கிறது. எப்போதும் அவர் பெரிய சதங்களை விளாச வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்.
ஒருநாளும் பயிற்சியை மிஸ் செய்ததே கிடையாது. வழக்கமாக 5 மணிக்கு காலை எழுந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவார். அதன்பின் பேருந்தில் எங்களுடன் இணைந்து பயிற்சிக்கு வருவார். பின்னர் மீண்டும் பேட்டிங் பயிற்சி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கேஎல் ராகுல் சொதப்பியுள்ளதால், அந்த இடத்தில் அடுத்த போட்டியில் சர்ஃபராஸ் கான் விளையாட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.