மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் அவுட்டான விதம் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணி டிஆர்எஸ் அப்பீல் கோரிய நிலையில், அஜாஸ் படேல் வீசிய பந்து ரிஷப் பண்ட் பேட்டில் உரசியதால் அவுட் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இந்திய அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் 43 பந்துகளில் இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் ரோஹித் சர்மா 11, விராட் கோலி, சுப்மன் கில், சர்ஃபராஸ் கான் தலா 1 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ரசிகர்கள் துவண்டு போயினர்.
பின்னர் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக தனது ஸ்டைலில் பவுண்டரிகளை விளாச தொடங்கினார். ஜடேஜாவை ஒருமுனையில் வைத்து ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டம் ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஜடேஜா 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரிஷப் பண்ட் இன்னும் தீவிரமாக பவுண்டரிகளை விளாச தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவர், 48 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
உணவு இடைவேளையின் போது இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், ரிஷப் பண்ட் - வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். அஜாஸ் படேல் வீசிய பந்தில் ரிஷப் பண்ட் அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் நியூசிலாந்து அணி ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்த தீவிரம் காட்டியது.
அந்த ஓவரின் 4வது பந்தை ரிஷப் பண்ட் டவுன் தி டிராக் இறங்கி வந்து டிஃபென்ஸ் ஆடினார். அந்த பந்து பேடில் உரசி விக்கெட் கீப்பர் பிளெண்டல் கைகளில் விழுந்தது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் உற்சாகமடைந்து அம்பயரிடம் அவுட் என்று முறையிட்டனர். ஆனால் கள நடுவர் அவுட் இல்லை என்று கைகளை விரித்தார். இதனால் கேப்டன் டாம் லேதம் டிஆர்எஸ் அப்பீலுக்கு சென்றார்.
ரீபிளேவில் பார்க்கும் போது ரிஷப் பண்ட் பேட்டில் பந்து உரசுவது போல் தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் ரிஷப் பண்ட் கால்களில் அணிருந்திருந்த பேடிலும் பேட் உரசியதாக பார்க்கப்பட்டது. இதனால் உடனடியாக ரிஷப் பண்ட் நடுவரிடம் சென்று கால்களில் பேட் உரசுவது தான் ஸ்னிக்கோவில் தெரிவதாக கூறி கொண்டிருந்தார். ஆனால் 3வது நடுவரோ, பந்து பேட்டில் உரசியதாக கூறி திடீரென அவுட் என்று தீர்ப்பளித்தார்.
இதனால் மும்பை மைதானமே மயான அமைதியானது. இதனால் ரிஷப் பண்ட் 57 பந்துகளில் ஒரு சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 64 ரன்கள் எடுத்து சோகத்துடன் பெவிலியன் திரும்பினார். ரிஷப் பண்ட்-க்கு அவுட் கொடுத்த முடிவு தவறானது என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் இந்திய அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.