மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக அரை சதம் அடித்து சாதனை படைத்து இருக்கிறார் ரிஷப் பண்ட். இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிவேகமாக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தது.

சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியவுடன் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடத் துவங்கினார். அவர் 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக அரை சதம் ஆகும்.
இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்ததே நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக அரை சதமாக இருந்தது. அந்த சாதனையை ஒரே போட்டியிலேயே முறியடித்து இருக்கிறார் ரிஷப் பண்ட். இந்தப் போட்டியில் பண்ட் 59 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து இந்திய அணி 180 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தொடர்ந்து ஆடியது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிவேக அரை சதம் என்ற சாதனையும் ரிஷப் பண்ட் வசமே உள்ளது. அவர் இலங்கை அணிக்கு எதிராக 2022 பெங்களூர் டெஸ்ட் போட்டியில் 28 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்தார். அதுவே இந்திய வீரர் அடித்த அதிவேக டெஸ்ட் அரை சதமாக உள்ளது.
ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் அடித்த சாதனை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் வசம் உள்ளது. அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு அபுதாபியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 21 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்தார்.