வதோரா: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், வரவிருக்கும் இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், 28 வயதான பந்த், வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வதோதராவில் உள்ள பி.சி.ஏ மைதானத்தில் இந்திய அணி வலைப்பயிற்சி மேற்கொண்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, பந்த் இடுப்புக்கு சற்று மேலே பந்தால் தாக்கப்பட்டார். வலியால் துடித்த அவர், உடனடியாக சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு பந்த், பி.சி.ஏ ஸ்டேடியத்தின் 'பி' மைதானத்திலிருந்து வெளியேறினார். அப்போது, இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கருடன் நீண்ட நேரம் உரையாடினார். தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உட்பட குழுவினர் உடனிருந்தனர். ஏற்கனவே இந்திய அணியில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக உள்ள நிலையில், கூடுதல் விக்கெட் கீப்பராக தான் பந்த்க்கு இடம் கிடைத்ததது.
இந்த சூழலில் பந்த் காயம் காரணமாக வெளியேறி இருப்பது அணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. மேலும் அவர் டி20 உலககோப்பை போட்டியிலும் இல்லை என்பதால், அது ரசிகர்களுக்கு கொஞ்சம் நிம்மதியையே தரும். இந்த சூழலில் டி20 உலககோப்பைக்கு தேர்வான இசான் கிஷனுக்கு வாய்ப்பு தரலாமா இல்லை சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருவரும் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் இருப்பதால், அவர்களுக்கு பதில் ஜித்தேண் சர்மாவை சேர்க்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் மாற்று வீரர் குறித்து பிசிசிஐ இன்னும் முடிவு எடுக்கவில்லை. டெஸ்டில் பட்டையை கிளப்பி உள்ள ரிஷப் பண்ட் 31 ஒருநாள் போட்டியில் 871 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 5 அரைசதம் அடங்கும்.