பெங்களுர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடியதன் மூலம் மீண்டும் போட்டிக்குள் வந்திருக்கிறது.
குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 356 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி தற்போது வெறும் 12 ரன்கள் தான் பின்தங்கி இருக்கிறது.

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 100 அல்லது 150 ரன்கள் வைத்தால் அது நியூசிலாந்துக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த தருணத்தில் கிரிக்கெட்டில் எப்போதுமே ஒரு ஓவர் அல்லது இரண்டு ஓவர் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு ஓவரில் இரண்டு விக்கெட் அடுத்தடுத்து விழுந்தாலும் சரி அதே ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டரி அடித்தாலும் சரி ஒட்டுமொத்தமாக போட்டியின் நிலைமையை மாறிவிடும்.
அப்படிப்பட்ட ஒரு ஓவர்தான் இன்று ஏஜாஸ் பட்டேல் வீசினார். ஆட்டத்தின் 66-வது ஓவரில் ஏஜாஸ், ரிஷப் பண்ட்க்கு வீசினார். இதில் ரிஷப் பண்ட் மதிய உணவு நேர இடைவெளிக்கு முன்பே நியூசிலாந்தின் ஸ்கோரை முந்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரடி காட்டினார். ஏஜாஸ் பட்டேல் வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த ரிஷப் பண்ட், இரண்டாவது பந்தை தடுத்தார்.
மீண்டும் மூன்றாவது பந்தை பண்ட் சிக்ஸருக்கு அடித்தார்.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இதை அடுத்து சுதாரித்துக் கொண்ட ஏஜாஸ் பட்டேல் பண்ட்டின் காலை குறி வைத்து பந்தை வீசினார். இந்த பந்து அவர் நினைத்தபடியே பண்ட்டின் காலில் பட நியூசிலாந்து வீரர்கள் LBW கேட்டனர். இதற்கு நடுவரும் அவுத்து வழங்கி விட்டார்.
அடடா! பண்ட் ஆட்டம் இழந்து விட்டாரே என ரசிகர்கள் நினைத்த நிலையில், அவர் திடீரென்று டி ஆர் எஸ் உதவியை நாடினார். இதன்பிறகு காண்பிக்கப்பட்ட ரீப்ளேவில் பேட்டில் பந்து பட்ட பிறகு தான் காலில் பந்து பட்டது தெரியவந்தது இதனை அடுத்து பண்ட் அவுட் ஆகவில்லை என அறிவிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து ஐந்தாவது பந்தில் மீண்டும் பண்ட்,காலில் பந்து பட இதற்கு நடுவர் நாட் அவுட் வழங்கினார். இம்முறை நியூசிலாந்து வீரர்கள் டிஆர்எஸ் முடிவை நாடினர்.
ஆனால் அது நாட் அவுட் என தெரிய வந்தது. இதனை அடுத்து ரிஷப் பண்ட் கடைசி பதில் மீண்டும் ஒரு ஷாட்டை தூக்கி அடித்தார்.அது பவுண்டரி லைனில் ரவீந்திரவிடம் கேட்ச் ஆக போகிறது என ரசிகர்கள் நினைத்தனர்.ஆனால் அவர் கேட்ச் பிடிப்பதற்கு முன்பே பந்து கீழே விழுந்து பவுண்டரிக்கு சென்றது. இதனால் ஒரே ஓவரில் 16 ரன்கள் அடிக்கப்பட்டாலும் பல திருப்பங்களுடன் இந்த ஓவர் முடிந்தது.