புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்து இருக்கிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முக்கியமான கட்டத்தில் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்து ஆடியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மோசமாக செயல்பட்டு வந்தது. இதை அடுத்து அந்த அணி தைரியமாக ஒரு முடிவை எடுத்தது. முன்னணி வீரர்களான பாபர் அசாம் மட்டும் ஷஹீன் அப்ரிடி நீண்ட காலமாக சரியாக செயல்படவில்லை என்பதால் அவர்களுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளின் போது கட்டாய ஓய்வு அளித்தது.

அந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதே போல, சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிக்காத ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்க வேண்டும், அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல் எழுந்து இருக்கிறது.
இந்திய அணியில் இடம் பெற வேண்டி பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூர் போட்டிகளில் பல சதங்கள் அடித்த வீரர்கள் வாய்ப்பின்றி இருக்கிறார்கள். ஆனால், இந்திய அணியில் மூத்த வீரர்கள் பலரும் இருப்பதால் அந்த இளம் வீரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.
35 வயதை தாண்டிய வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் யார், யார்? என்று பார்த்தால் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆவர். இதற்கு முன் அஜின்கியா ரகானே மற்றும் புஜாரா இந்திய டெஸ்ட் அணியில் சரியாக ஆடாத போது அவர்களது வயதை சுட்டிக்காட்டியும், அவர்கள் இளம் வீரர்கள் அளவுக்கு ஈடு கொடுத்து ஆடவில்லை என்ற காரணத்தை முன்வைத்து நீக்கப்பட்டு இருந்தனர்.
கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சூழ்நிலையில்தான் தற்போது ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் உள்ளனர். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும் அவர் தற்போது சுழற் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சில் தடுமாறி வருகிறார். இது மிகவும் அப்பட்டமாக, அனைவருக்கும் தெரிந்த விஷயமாக மாறிவிட்டது.
மேலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளூர் போட்டிகளிலும் ஆடுவதில்லை. எனவே, அவர்களை உள்ளூர் போட்டிகளில் ஆட வைக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு சிறிது காலம் இந்திய அணியில் இருந்து விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
எனினும், பிசிசிஐ இப்போதைக்கு இது போன்ற முடிவுகள் எதையும் எடுக்காது என தெரிகிறது. இவர்கள் இருவரும் அடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்று இருக்கின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அதிக ரன்கள் குவித்து தங்கள் ஃபார்மை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி அடுத்து ஆட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு அதிக அழுத்தம் ஏற்படும்.