புனே : இந்திய கிரிக்கெட் அணியில் சில கேப்டன்கள் சில வரலாற்று தவறை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை அடியோடு அழிந்து போயிருக்கின்றது. உதாரணத்திற்கு ஆல்ரவுண்டரான இர்ஃபான் பதானை அதிக ஓவர் டெஸ்ட் போட்டிகளில் வீச வைத்து விட்டு பின்னர் அவரையே தொடக்க வீரராக பயன்படுத்தி அவருடைய கேரியரே முடித்து இருக்கிறார்கள்.
இதே போல் மிகவும் பிரபலமான தவறு என்றால் அது 2017 ஆம் ஆண்டு விராட் கோலி செய்ததுதான். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 300 ரன்கள் அடிப்பதெல்லாம் வரலாற்று சாதனை. இந்தியாவில் அப்படி ஒரு சாதனையை ஷேவாக்கும் கருண் நாயர் என்ற வீரரும் தான் செய்து இருக்கிறார்கள்.

அப்படி முச்சதம் அடித்த வீரரை அடுத்த ஒரு ஆண்டு வரை கூட அவர் எந்த போட்டியிலும் சரியாக விளையாடவில்லை என்றால் பிளேயிங் லெவனில் வைப்பார்கள். ஆனால் விராட் கோலி கேப்டன் ஆக இருந்தபோது முச்சதம் அடித்த கருண் நாயரை, அடுத்த டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நீக்கி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சென்னையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
அந்த தொடரில் ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் கருண் நாயர் களம் இறங்கி முச்சதம் அடித்தார். இந்த சூழலில் அந்தத் தொடர் முடிவடைந்த உடன் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் ரகானே முழு உடல் தகுதியை பெற்றதால், அவரை அணிக்குள் கொண்டு வந்து கருண் நாயரை அணியிலிருந்து கோலி அதிரடியாக நீக்கினார்.
அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் கருண் நாயருக்கு இடம் தரப்படவில்லை. எனினும் இரண்டாவது டெஸ்டில் கருண் தேர்வானாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் முச்சதம் அடித்தும் அணியில் இடமில்லையா என்ற விரக்தியிலேயே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
தற்போது அதேபோல் சர்பராஸ்கான் 150 ரன்கள் விளாசி இருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருடைய இடம் பறிபோகும் சூழல் ஏற்பட்டது. இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் உள்ளிட்ட பலரும் கே எல் ராகுல் என்ற சீனியர் வீரருக்கு ஆதரவளித்த நிலையில் ரோகித் சர்மா சர்பராஸ் கானுக்கு தான் இடம் கொடுப்பேன் என்று ஒற்றை காலில் நின்று செய்து காட்டியிருக்கிறார். இதன் மூலம் கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது போல் சர்பராஸ்கான் வாழ்க்கை காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.