பெங்களூர்: முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் என்ற சிறிய இலக்கை நிர்ணயம் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த நிலையில், போட்டியின் முடிவுக்கு முன் அஜய் ஜடேஜா இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பற்றி பேசினார். அப்போது ரோஹித் சர்மா அணித் தேர்வில் செய்த ஒரு தவறை சுட்டிக் காட்டினார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இது தவறான முடிவாக அமைந்துவிட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து பேச்சாளர்களே இந்திய அணியின் விக்கெட்களை அதிகமாக வீழ்த்தி உள்ளனர்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் பிட்ச் மழையின் காரணமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் உள்ளது. இதை கணிக்கத் தவறிய கேப்டன் ரோஹித் சர்மா மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற திட்டத்தை கையில் எடுத்து அணித் தேர்வில் தவறு செய்து இருக்கிறார்.
ஐந்தாம் நாள் அன்று காலை மழையின் காரணமாக பிட்ச் லேசாக ஈரப்பதமாக இருக்கும். அந்த நேரத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். அதை பயன்படுத்தி இந்திய அணி முதல் 20 ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தி நியூசிலாந்து அணியின் விக்கெட்களை விரைவாக வீழ்த்தலாம் என்றாலும் கூட அணியில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பதை அஜய் ஜடேஜா சுட்டிக் காட்டினார்.
இந்திய அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என யாரும் இல்லை. அதனாலேயே இந்திய அணியால் முதல் 20 ஓவர்களிலும் வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடியாது. 1, 2 விக்கெட்களை கிடைத்தாலும் அழுத்தத்தை தக்க வைக்க முடியாது. இதை அஜய் ஜடேஜா சுட்டிக்காட்டி இருந்தார். அதுதான் போட்டியிலும் நடந்தது.
பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினாலும் அவரால் அதிகபட்சமாக தொடர்ந்து 8 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. சிராஜ் தொடர்ந்து 6 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதன் பின் வேறு வழியின்றி சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.
"107 ரன்கள் என்ற இலக்கை வைத்து இந்திய அணி வெற்றி பெற்றால் அது சிறப்பானதாக இருக்கும். ஆனால், நடைமுறையில் பார்க்கும்போது வெற்றி பெற முடியும் என எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், முதல் சில ஓவர்கள் பிட்ச்சில் ஈரப்பதம் இருக்கும். காலையில் வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து துவங்குவீர்கள். ஒன்று அல்லது இரண்டு விக்கெட் கிடைத்தாலும் இந்திய அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இல்லை." என்றார் அஜய் ஜடேஜா.