
சூர்யகுமாரின் ருத்ர தாண்டவம்
டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களுக்கு ஏமாற்றிய போது, சூர்யகுமார் மட்டும் தனி ஆளாக வாணவேடிக்கை காட்டினார். 51 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 111 ரன்களை விளாசினார். அதுவும் அவர் விளையாடியது வீடியோ கேம் ஆடியது போல இருந்ததாக விராட் கோலியே வியப்பில் பாராட்டியிருந்தார்.

நம்பர் 1 வீரர்
சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டிற்குள் வந்தே 20 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் குறைந்த காலத்திலேயே உலகின் நம்பர் 1 வீரராக திகழ்கிறார். அதுவும் டி20 கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். 39 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1,395 ரன்களை விளாசியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா??

சுவாரஸ்ய ட்வீட்
இந்நிலையில் இதனையெல்லாம் தாண்டி ஒரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது ரோகித் சர்மாவின் ட்விட்டர் பதிவு. கடந்த 2011ம் ஆண்டு ரோகித் சர்மா போட்ட ஒரு ட்வீட்டை இணையத்தில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். அதாவது 11 வருடங்களுக்கு முன் அவர் " சென்னையில் நடந்த பிசிசிஐ-ன் விருது நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்துள்ளேன். சில அட்டகாச வீரர்கள் வரவுள்ளனர். அதுவும் மும்பையில் இருந்து சூர்யகுமார் யாதவ் என்ற வீரர் எதிர்காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நட்சத்திரமாக திகழ்வார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ரோகித்தின் முடிவு
இதனால் சூர்யகுமாரின் டி20 திறமையை பல வருடங்களுக்கு முன்பே ரோகித் சர்மா கணித்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூர்யகுமார் யாதவை சாதூர்யமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வந்திருந்தார். ஒவ்வொரு ஏலத்திலும் அவரை தக்கவைத்தது. இதே போல இந்திய அணிக்குள்ளும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications