மும்பை: 55 ஆண்டுகளில் மிக மோசமான கேப்டன்சி சாதனை ஒன்றை செய்து இருக்கிறார் ரோஹித் சர்மா. கடந்த 1969 ஆம் ஆண்டில் டைகர் பட்டோடியின் கேப்டன்சியில் இந்திய அணி ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது.
அப்போது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருந்தது. அப்போது இருந்து 2023 வரை இந்திய அணி ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோற்றதே இல்லை.

2024 இல் ரோஹித் சர்மா கேப்டன்சியல் இந்திய அணி ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது.
அதன் பின் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதன் மூலம் 55 ஆண்டுகளுக்கு பின் ஒரே ஆண்டில் நான்கு டெஸ்ட் போட்டி தோல்விகளை சந்தித்த கேப்டன் என்ற மோசமான சாதனையை செய்து இருக்கிறார் ரோஹித் சர்மா.
அது மட்டும் இன்றி சொந்த மண்ணில் அதிக போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய கேப்டன்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். டைகர் பட்டோடி இந்திய மண்ணில் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தோல்வியை சந்தித்து இருக்கிறார்.
தற்போது ரோஹித் சர்மா இந்திய மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தோல்வியை சந்தித்து இருக்கிறார். இதன் மூலம், இந்திய டெஸ்ட அணியின் மோசமான கேப்டன்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்று இருக்கிறார். விராட் கோலி இந்திய மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக தோல்வியை சந்தித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டன் என்பதை கேப்டன் பதவியை இழந்த பின்பும் நிரூபித்து இருக்கிறார் விராட் கோலி.