மும்பை: நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 0 என கைப்பற்றிய நிலையில் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் உற்சாகத்தில் இருக்கிறார் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்.
இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவில், "இப்போது இருக்கும் இந்திய வீரர்களால் ஸ்பின் பந்துவீச்சை சந்திக்கவே முடியாது, சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் போன்றவர்கள் அல்ல இப்போது இருக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள். இவர்களால் சுழற் பந்துவீச்சை சந்திக்கவே முடியாது." என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் 147 ரன்கள் என்ற சிறிய வெற்றி இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய வீரர்கள் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். நியூசிலாந்து அணியின் இடது கை சுழற் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் பந்து வீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.
ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்தும், விராட் கோலி ஒரு ரன் எடுத்தும் ஆட்டம் இழந்து இருந்தனர். இதை அடுத்து சைமன் டல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இருவருக்கும் வயதாகி விட்டதால் இனி அவர்கள் நன்றாக ஆடுவது என்பது கடினமான விஷயம் என கூறி இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், "கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அதிக வெற்றி கிடைக்காது. வயதாக, ஆக வெற்றிகள் குறைவாகவே கிடைக்கும். மனதளவில் இதற்கு முன்பு இருந்த நிலைக்கு நீங்கள் செல்வது என்பது மிகவும் கடினமாகவே இருக்கும். அதற்காக கடினமான பயிற்சிகள் மற்றும் தயார் நிலையை செய்வதற்கு கஷ்டப்பட வேண்டி இருக்கும்." என்று கோலி, ரோஹித்துக்கு வயது ஆகி விட்டது என்பதை சுட்டிக் காட்டினார்.
மேலும், "அவர்கள் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால், அவர்களுக்கு போதிய வெற்றி கிடைக்கவில்லை. அவர்கள் இந்த போட்டியில் சுமாராகவே ஆடி இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் சிறப்பாக ஆட முடியும். ஆனால் அது மிகவும் கடினமான ஒன்றாக ஆகி இருக்கிறது. அதற்காக அவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்." என்றார் சைமன் டல்.