மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த போட்டியில் சதம் அடித்தும் அணியிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "இது அப்பட்டமான துரோகம்" என்றும், "சிஎஸ்கே அணியில் இருப்பதால் தான் அவருக்கு இந்த நிலைமை" என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தேர்வுக்குழுவை வறுத்தெடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், ராய்ப்பூரில் நடந்த போட்டியில் 105 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட நியூசிலாந்துத் தொடருக்கான அணியில் அவரது பெயர் இல்லை.

ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்புவதால் ருதுராஜ் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை என்று பிசிசிஐயே கூறியுள்ளது. மேலும், ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால், உண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட முடியாமல் போனால் ரிஷப் பண்ட்டை மிடில் ஆர்டரில் ஆட வைக்கலாம் என்பதே அணி நிர்வாகத்தின் திட்டமாக இருக்கக் கூடும் என ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
"முழுமையாகக் குணமாகாத ஒருவருக்காக, சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்குவது என்ன நியாயம்?" என்றும், "ஒருநாள் போட்டிகளில் 33 என்ற சராசரி வைத்துள்ள ரிஷப் பண்ட்டுக்காக கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த ருதுராஜை நீக்குவது சரியா?" என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ருதுராஜின் நீக்கத்தை அடுத்து விரக்தியடைந்த ரசிகர்கள் ருதுராஜுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள சில கருத்துக்கள் பிசிசிஐ முகத்தில் அறைவதாக உள்ளன. அவற்றில் சில -
"ருதுராஜ், நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனாக இருப்பதால்தான் உங்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. சிஎஸ்கேவை விட்டு வெளியேறுங்கள், அப்போதுதான் இந்திய அணியில் இடம் கிடைக்கும்."
"சஞ்சு சாம்சனுக்கு நடந்த அதே கொடுமைதான் இப்போது ருதுராஜுக்கும் நடக்கிறது."
"இந்தியாவில் உங்களுக்கு மதிப்பு இல்லை என்றால் பேசாமல் அமெரிக்காவுக்கே போய் கிரிக்கெட் விளையாடுங்கள்."
ரசிகர்களின் கோபம் ரிஷப் பண்ட் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் மீதும் திரும்பியுள்ளது. "சமீபகாலமாகச் சரியாக விளையாடாத ரிஷப் பண்ட்டிற்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் 257 ரன்கள் குவித்த ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் புறக்கணிக்கப்படுகிறார். இது உச்சக்கட்ட பாரபட்சம்" என்று ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
டி20 மற்றும் ஒருநாள் என இரண்டு வடிவங்களிலும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டும், ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவது இந்திய கிரிக்கெட்டில் விவாதிக்கப்படும் முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது.
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.