சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட் புறக்கணிக்கப்பட்டது குறித்துக் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், "ரிஷப் பண்ட்டிற்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டையே தேர்வு செய்திருக்க வேண்டும். அதுவே நியாயமான முடிவாக இருந்திருக்கும். ரோஹித், கோலி இருக்கும் வரை ருதுராஜ்-க்கு வாய்ப்பு கிடைக்காது" என்று விமர்சனம் செய்துள்ளார்.
தனது யூடியூப் சேனலான 'அஸ் கி பாத்' (Ash ki Baat) நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், அணித் தேர்வு குறித்துத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு வருவதால், அவருக்கு அணியில் இடம் கொடுப்பது முற்றிலும் சரியானது. அது அவருடைய இடம். ஆனால், போட்டி என்று வந்தால் அது ரிஷப் பண்ட் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இடையில்தான் இருந்தது."
"என்னைப் பொறுத்தவரை இது மிகவும் எளிதான, நேரடியான ஒரு முடிவு. ஒரு இரண்டாவது விக்கெட் கீப்பரை அணியில் எடுப்பதற்குப் பதிலாக, ருதுராஜ் போன்ற ஒரு 'ஸ்பெஷலிஸ்ட்' பேட்ஸ்மேனைத் தேர்வு செய்திருக்க வேண்டும்" என்று அஸ்வின் கூறினார்.

ஏன் ரிஷப் பண்ட்டை விட ருதுராஜ் சிறந்த தேர்வு என்பதற்கும் அஸ்வின் விளக்கம் அளித்தார். "ஒருநாள் போட்டிகளில் 4 அல்லது 5-வது இடத்தில் களமிறங்க ருதுராஜே பொருத்தமானவர். சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதிலும், விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவதிலும், ஒரு இன்னிங்ஸை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பதிலும் ருதுராஜ் மிகச் சிறந்தவர்"
"ரிஷப் பண்ட்டைப் பொறுத்தவரை, அவர் மிடில் ஆர்டரை விட டாப் ஆர்டரில் விளையாடவே பொருத்தமானவர். எனவே ருதுராஜை நீக்கியது அணிக்குச் சமநிலையைத் தராது" என்றார்.
திறமை இருந்தும் ருதுராஜுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பது குறித்தும் அஸ்வின் எதார்த்தத்தைப் பேசினார். "ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறும் வரை, ருதுராஜ் கெய்க்வாட்டிற்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். அவர்கள் அணியில் இருக்கும் வரை இளம் வீரர்களுக்கு இடம் கிடைப்பது சிரமம்தான்" என்று குறிப்பிட்டார்.
இறுதியாக, ருதுராஜுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அஸ்வின் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், "உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல. எழுந்து வாருங்கள், ஆடை அணியுங்கள், பேடை கட்டுங்கள்... ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். இந்திய அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு கடினமானது. அதனால் மனம் தளராமல் போராடுங்கள்" என்று அறிவுரை கூறியுள்ளார்.
கடந்த போட்டியில் சதம் அடித்தும், உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்தும் ருதுராஜ் நீக்கப்பட்டதற்கு, அஸ்வின் போன்ற ஒரு மூத்த வீரரே ஆதரவுக் குரல் கொடுத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.