மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0 - 0 என ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்திய மண்ணில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து இருக்கிறது. இந்த நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியை பார்த்து சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த தோல்விக்கு என்ன காரணம் என அவர் சில கேள்விகளை பட்டியலிட்டு இருக்கிறார். மேலும், மூன்றாவது போட்டியில் ரன் குவித்த இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் பெயரை மட்டும் சொல்லி பாராட்டி இருக்கிறார். அதன் மூலம் மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என்பதை குத்திக் காட்டி இருக்கிறார். அவரது பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய அணியின் தோல்வி பற்றி சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், "0 - 3 என சொந்த மண்ணில் தோல்வி அடைவது ஜீரணிக்க முடியாத விஷயம். தோல்வி குறித்து நாம் பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. இந்த தொடருக்கு இந்திய அணி சரியாக தயாராகவில்லையா? அல்லது இந்திய வீரர்கள் தவறான ஷாட்களை அடித்தார்களா? அல்லது சரியான போட்டிப் பயிற்சி இல்லையா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த டெஸ்ட் சீசனுக்கு முன் இந்திய அணியின் மூத்த வீரர்கள் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் ட்ராபியில் விளையாட மறுத்ததைத்தான் சச்சின் டெண்டுல்கர் மறைமுகமாக, "போட்டிப் பயிற்சி இல்லையா?" என சுட்டிக்காட்டி இருக்கிறார் எனவும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், மூன்றாவது போட்டியில் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்ததையும், சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் அடித்ததையும் சுட்டிக்காட்டி பாராட்டி இருக்கிறார். இது பற்றி சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், "சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் தனது திறமையை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தனது ஃபுட் ஒர்க்கை வைத்து கடினமான பிட்ச்சிலும் மற்றவர்களில் இருந்து மாறுபட்டு செயல்பட்டார்." என்று பாராட்டி இருக்கிறார்.
இதன் மூலம் ரிஷப் பண்ட், சுப்மன் கில் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருப்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.