ராய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த சூழலில் இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 208 ரன்களை அடித்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலில் இருந்து அதிரடி காட்ட வேண்டும் என்று உத்வேகத்தில் விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் இரண்டாவது பந்திலே சிக்ஸர் அடித்து அசத்தினார். எனினும் அடுத்தடுத்து பந்துகளில் அவர் ரன்கள் சேர்க்க முடியவில்லை.
இந்த தருணத்தில் பெரிய ஷாட் அடிக்க முற்பட்டு ஆட்டத்தின் ஐந்தாவது பந்திலே சஞ்சு சாம்சன் வெறும் ஆறு ரன்களில் ஆட்டம் இழந்தார். இது இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இந்த நிலையில் தான் அபிஷேக் ஷர்மா தனது முதல் பந்தை போட்டியின் இரண்டாவது ஓவரில் எதிர்கொண்டார்.
அபிஷேக் ஷர்மாவும் வழக்கம் போல் சிக்ஸர் அடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு பந்தை பிளிக் செய்ய அது நேராக சிக்ஸர் லைனில் நின்று கொண்டிருந்த ஃபீல்டரிடம் கேட்ச் ஆனது. இதனை எடுத்து இந்திய அணி 6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேவில் தொடக்க ஜோடி நல்ல அடித்தளத்தை அமைத்து தர வேண்டும்.
ஆனால் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டும் என்ற காரணத்தால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. எனினும் மூன்றாவது வீரராக களமிறங்கிய இசான் கிஷன் தனது வழக்கமான அதிரடியை காட்டி ரன்களை சேர்த்து வருகிறார். இது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.