பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் சதம் அடித்தார். இதுவே அவரது முதல் டெஸ்ட் போட்டி சதம் ஆகும். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் ஆட்டத்தால் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன சர்ஃபராஸ் கான் இரண்டாவது இன்னிங்ஸில் நிலையாக நின்று ஆடி சதம் அடித்து இருக்கிறார். ஏற்கனவே, இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அரை சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்து இருந்தது. அடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு அழுத்தம் அளித்தது. முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது.
இந்திய அணி பெரிதாக ரன் குவித்தால் மட்டுமே இந்தப் போட்டியில் தோல்வியை தவிர்க்கலாம் என்ற நிலையில் சர்ஃபராஸ் கான் இரண்டாவது இன்னிங்ஸில் அபார ஆட்டம் ஆடி சதம் அடித்தார். வெறும் 110 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
57 ஓவர்களில் இந்திய அணி மூன்றில் விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃபராஸ் கான் சதம் அடித்த நிலையிலும், ரிஷப் பண்ட் 11 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.