பெங்களூர்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ரன் அவுட்டாவதை தடுப்பதற்காக எதிர்முனையில் இருந்த சர்ஃபராஸ் கான் பிட்சில் கைகளை ஆட்டியும், குதித்தும் கவனத்தை திருப்ப செய்த செயல்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. சர்ஃபராஸ் கானின் செயல்கள் ஓய்வறையில் இருந்த இந்திய அணி வீரர்களையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 3வது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் 4வது நாள் ஆட்டத்தை சர்ஃபராஸ் கான் - ரிஷப் பண்ட் கூட்டணி தொடங்கியது.

அதிரடியாக பவுண்டரிகளை விளாசிய சர்ஃபராஸ் கான், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். மறுபக்கம் ஸ்பின்னர்களை பொளந்து கட்டிய ரிஷப் பண்ட், 55 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்களை சேர்த்திருந்த போது, திடீரென மழை பெய்ய தொடங்கியது.
இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 12 ரன்கள் மட்டும் பின் தங்கியுள்ளதால், மழை பெய்யாமல் இருந்தால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே சர்ஃபராஸ் கான் களத்தில் செய்த சம்பவம் ஒன்று ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. மேட் ஹென்றி வீசிய 56வது ஓவரின் முதல் பந்தில் சர்ஃபராஸ் கான் டீப் பேக்வர்ட் பாய்ண்ட் திசையில் அடித்தார்.
அப்போது சர்ஃபராஸ் கான் முதல் ரன்னை விரைவாக ஓட, ரிஷப் பண்ட் தாமதமாகவே முதல் ரன்னை எடுத்தார். இதன்பின் அவர் 2வது ரன்னுக்கு திரும்ப முயற்சிக்கும் போது, டாம் பிளெண்டல் கைகளில் இருந்து பந்து த்ரோ செய்யப்பட்டது. இதனை பார்த்த சர்ஃபராஸ் கான் உடனடியாக ரிஷப் பண்ட் ரன் அவுட் செய்யப்படுவதை தடுப்பதற்காக பிட்சில் நடுவே இருந்து கத்த தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் ரிஷப் பண்ட் அவரை பார்க்கவே இல்லை. இதனால் பிட்சின் நடுவில் வந்து குதித்து கொண்டு சர்ஃபராஸ் கான் கத்தினார். பின்னர் சர்ஃபராஸ் கானை பார்த்த ரிஷப் பண்ட், உடனடியாக 2வது ரன் ஓடுவதை நிறுத்தி மீண்டும் க்ரீஸிற்கு திரும்பினார். இதனை ஓய்வறையில் இருந்து பார்த்து கொண்டிருந்த கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, சிராஜ் உள்ளிட்டோர் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினர்.
ஏனென்றால் சர்ஃபராஸ் கான் 94 ரன்களில் இருந்த போது பாதியளவு க்ரீஸில் இருந்து இறங்கி வந்து ரிஷப் பண்டை காப்பாற்ற முயற்சித்தார். அதுமட்டுமல்லாமல் பிட்சில் குதித்து அவர் செய்த செயல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் ரிஷப் பண்ட் - சர்ஃபராஸ் கான் இருவருமே 2016 யு19 உலகக்கோப்பை தொடரில் இணைந்து விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.