பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று தனது நான்காவது போட்டியிலேயே முதல் டெஸ்ட் சதத்தை அடித்து இருக்கும் சர்ஃபராஸ் கான் ரத்தத்தை ருசி பார்த்து விட்டார் எனவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் பெற தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இந்திய அணியில் அவரது ஆதிக்கம் ஆரம்பித்து இருப்பதாக கூறி இருக்கிறார் அவரது பள்ளிப் பருவ பயிற்சியாளர் ராஜு பாதக்.
சர்ஃபராஸ் கான் மட்டுமின்றி இந்திய அணியில் ஆடி இருக்கும் ப்ரித்வி ஷா, ஜெய்ஸ்வால் ஆகியோரது பள்ளிப் பருவத்திலும் ராஜு பாதக் அவர்களுக்கு பயிற்சியாளராக இருந்து இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கானின் ஆட்டம் மற்றும் அவரது எதிர்காலம் பற்றிய ராஜு பாதக் பேசியதாவது -

"சர்ஃபராஸ் கான் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். அந்த இன்னிங்ஸில் வேறு நான்கு இந்திய வீரர்களும் டக் அவுட் ஆனார்கள். அப்போது பேட்டிங் செய்ய ஏற்ற சூழ்நிலை இல்லை. அப்போது சர்ஃபராஸ் கான் தன் மீதே வெறுப்படையவில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆடிய ஆட்டம் அவரது மன வலிமையை பற்றி பெரிதாக பேசும்."
"அந்த சூழ்நிலையில் அத்தனை ரன் குவிப்பது எளிது அல்ல. சர்ஃபராஸ் கான் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையின் கிளப் கிரிக்கெட் கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள். அதில் வெளிநாட்டு வீரர்களும் விளையாடுவார்கள். மிகவும் கடினமாக இருக்கும் அந்த சூழ்நிலையில் அதிக அழுத்தத்தில் ஆடி பழக்கப்பட்டவர் சர்ஃபராஸ் கான். அவர் பந்து எப்படி வருகிறது? என்பதை மட்டுமே பார்த்து ஆடினார்."
"சர்ஃபராஸ் கான் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை நிம்மதி அடையவே விடவில்லை. அஜாஸ் பட்டேலுக்கு எதிராக மூன்று சிக்ஸ் அடித்ததால் நியூசிலாந்து அணி தங்கள் திட்டத்தை மாற்ற வேண்டியதாக விட்டது. அப்போதுதான் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. அவர் எப்போதுமே நீண்ட இன்னிங்ஸ் ஆடுவதற்காக பெயர் பெற்றவர். எப்போதும் "டாடி ஹண்ட்ரட்" (150 ரன்களுக்கும் மேல்) அடிப்பார்."
"அவருடைய கொள்கை மிகவும் எளிதானது. "நேற்றைய நாளை மறந்து விட வேண்டும். இன்றைய நாளில் வாழ வேண்டும்" என்று சொல்வார். சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்காக எல்லாவற்றையும் செய்கிறார். அதிரடியாக ரன் சேர்க்கிறார். கடினமான சூழ்நிலையில் இருந்து அணியை மீட்கிறார். அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான சுற்றுப்பயணத்தில் நிச்சயம் இடம் அளிக்க வேண்டும். ஆனால், அது முற்றிலும் தேர்வுக் குழு மற்றும் அணி நிர்வாகத்தின் கைகளில் தான் இருக்கிறது. அவர் பெரிய சவால்களுக்கு தயாராகி விட்டார் என்று நான் நம்புகிறேன். சிங்கம் ரத்தத்தை ருசி கண்டுவிட்டது." என்றார் ராஜு பாதக்.