புனே: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் போது மழை பெய்யுமா? என்ற கேள்வி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் எழுந்து உள்ளது. ஏனெனில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் மழையால் தான் இந்திய அணி தோல்வி அடைந்ததாக ஒரு பார்வை உள்ளது.
பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுமையாக மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளன்று மழையால் ஈரப்பதமாக இருந்த பிட்ச்சை சரியாக கணிக்காமல் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில், புனே போட்டியிலும் அது போல மழை பெய்யுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 24 முதல் 28 வரை நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் ஐந்து நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வெதர் டாட் காம் இணையதளத்தில் வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி பார்த்தால் ஐந்து நாட்களிலும் போட்டி முழுமையாக நடைபெறும் என தெரிகிறது. ஐந்து நாட்களிலும் வானம் மிக லேசான மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் இந்தப் போட்டியில் இந்திய அணி வானிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. புனே டெஸ்ட் போட்டிக்கு மழையால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் இந்திய ரசிகர்கள் சற்று ஆசுவாசமாக இருக்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும்.