புனே: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. அந்த அணி பேட்டிங் தேர்வு செய்தது. மேலும், அந்த அணி மூன்று ஸ்பின்னர்கள் உடன் களமிறங்கி இருக்கிறது. இது இந்திய அணிக்கு முதல் அடியாக விழுந்துள்ளது.
புனே மைதானத்தின் பிட்ச் முதல் நாள் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும், நியூசிலாந்து அணி அதிக ஸ்பின்னர்களை வைத்துள்ளதால் மூன்றாவது நாள் முதல் அந்த அணி பந்து வீச்சிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸில் தோல்வியடைந்தது பற்றி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், தானும் முதலில் பேட்டிங் தேர்வு செய்யவே விரும்பியதாக சுட்டிக் காட்டினார். பிட்ச் காய்ந்து இருப்பதால் முதல் பத்து ஓவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம் என்றும் கூறினார் ரோஹித் சர்மா.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் இந்த தொடரை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணியின் விக்கெட்களை முதல் நாளுக்குள் வீழ்த்துவதே முக்கியம். இரண்டாவது நாள் வரை நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தால் பெரிய ஸ்கோரை எடுத்து விடும். எனவே, இந்திய அணி பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதன் காரணமாகவே ரோஹித் சர்மா முதல் 10 ஓவர்கள் பற்றி குறிப்பிட்டார். அதில் 2 - 3 விக்கெட்களை வீழ்த்தினால் அதன் பின் நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் அளித்து 10 விக்கெட்களையும் வீழ்த்த முடியும் என்பதே இந்திய அணியின் திட்டமாக உள்ளது.
புனே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கி உள்ள இந்திய அணி விவரம் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா