மும்பை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் அரை இறுதிப் போட்டியில் பிட்ச் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருப்பதாகவும், அதனால் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களால் ஒன்றுமே செய்ய முடியாது எனவும் கூறி இந்திய அணியை சீண்டி இருக்கிறார் முன்னாள் நியூசிலாந்து வீரர் மிட்செல் மெக்கிளினகன்
2023 உலகக்கோப்பை தொடரின் முதல் அரை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான பிட்ச் குறித்து சில செய்திகள் வெளியாகின.

அதில் பந்து பவுன்ஸ் ஆகாது. ஸ்லோ பிட்ச்சாக இருக்கும் என கூறப்பட்டு இருந்தது. இப்படிப்பட்ட பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காது. சுழற் பந்துவீச்சுக்கு தான் அதிகம் ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மிட்செல் மெக்கிளினகன், பிட்ச் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் பேட்டுக்கு பந்து வரும் வகையில் உள்ளது. இதுவரை இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால், இந்த பிட்ச்சில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. நியூசிலாந்து ஸ்பின்னர் மிட்செல் சான்ட்னர் தான் ஆட்டநாயகன் என அவர் கூறி இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றனர். பும்ரா 17 விக்கெட், முகமது ஷமி ஐந்து போட்டிகளில் 16 விக்கெட்கள், முகமது சிராஜ் 12 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர். இந்த நிலையில், அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறி சீண்டி இருக்கிறார் மிட்செல் மெக்கிளினகன்.
இதில் வேடிக்கை என்னவென்றால் நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் அதிக விக்கெட் வீழ்த்துவார் என்றால், இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, குல்தீப் யாதவும் கூட அதிக விக்கெட் வீழ்த்த முடியும் தானே? ஆனால், மிட்செல் மெக்கிளினகன் வேண்டுமென்றே இந்திய அணியை சீண்டி விட வேண்டும் என்பதற்காக சான்ட்னர் ஆட்டநாயகன் விருதை வெல்வார் என கூறி இருக்கிறார்.
இந்தப் போட்டிக்கான பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது.