ராய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தாலும், பின்னர் சுதாரித்து வெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சிவம் துபே ஆட்டத்திற்குப் பின் ஓய்வறையில் நடந்த சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
வெற்றி குறித்துப் பேசிய சிவம் துபே, "இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. குறிப்பாக இஷான் கிஷன் முற்றிலும் மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் வரிசையில் களமிறங்கும் வீரர்களிடம் இருந்து அணி எதிர்பார்ப்பது இதுதான். கடந்த போட்டியில் அபிஷேக் சர்மா ஜொலித்தார். இப்போட்டியில் இஷான் மற்றும் சூர்யா இருவரும் கலக்கியுள்ளனர்" என்று பாராட்டினார்.

இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்பது குறித்தும் துபே மனம் திறந்தார். "இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததைப் பற்றி நாங்கள் பெரிதாகக் கவலைப்படவில்லை. நான் பதற்றமடையாமல் பிசியோவிடம் எனது முதுகுப் பிடிப்பைச் சரிசெய்யுமாறு கூறிக் கொண்டிருந்தேன். டிரெஸ்ஸிங் ரூமில் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். ஏனெனில் இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். இது கிரிக்கெட், விக்கெட்டுகள் விழுவது சகஜம். ஆனால் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரராலும் தனி ஆளாக நின்று ஆட்டத்தை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது" என்று கூறினார்.
பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட மாற்றம் குறித்துப் பேசிய அவர், "அது ஆட்டத்தின் சூழலைப் பொறுத்தது. களத்தில் ஒரு இடது கை மற்றும் வலது கை பேட்ஸ்மேன் கூட்டணி இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இஷான் மற்றும் சூர்யா ஆடிக்கொண்டிருந்தனர். அடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் நான் தயாராக இருந்தோம். அந்த நேரத்தில் அணிக்கு என்ன தேவையோ அதற்கேற்ப பேட்டிங் வரிசை அமையும்" என்று விளக்கமளித்தார்.
ஒரு ஆல்-ரவுண்டராகத் தனது பங்களிப்பு குறித்துப் பேசிய துபே, "அணிக்குத் தேவைப்படும்போது பந்துவீச்சில் பங்களிப்பது மிகவும் முக்கியம். அது ஒரு ஓவராக இருந்தாலும் சரி, இரண்டு ஓவராக இருந்தாலும் சரி, என்னால் முடிந்த பங்களிப்பை அளிப்பது எனக்கும் அணிக்கும் நல்லது" என்று தெரிவித்தார். இந்தப் போட்டியில் சிவம் துபே பந்துவீச்சில் 1 விக்கெட்டைக் கைப்பற்றியதுடன், பேட்டிங்கில் 18 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.