மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், இந்திய ஆல்-ரவுண்டர் சிவம் துபே சிறப்பாக பயன்படுத்தினார் என்று கவாஸ்கர் பாராட்டினார். 4வது டி20 போட்டியில் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் குவித்து, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் இந்தியா 216 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்தி விளையாடியது. அப்போது, ஹர்திக் பாண்டியா அவுட்டான பிறகு, 63/4 என்ற இக்கட்டான நிலையில் துபே களமிறங்கினார்.
களம் இறங்கிய முதல் பந்திலேயே, இடது கை பேட்ஸ்மேனான அவர், பிரம்மாண்டமான சிக்ஸரை பறக்கவிட்டு, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு உடனடியாக அழுத்தத்தை ஏற்படுத்தினார். விக்கெட்டுகள் சரிந்தபோதிலும், துபே தனது முதல் பந்திலிருந்தே காட்டிய அதிரடியான மனப்பான்மையைப் புகழ்பெற்ற இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் பெரிதும் பாராட்டினார்.

இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசையால், துபேக்கு பொதுவாக பேட்டிங் செய்ய அதிக பந்துகள் கிடைப்பதில்லை. ஆனால் இந்த அரிதான வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் என்று சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டினார். இது குறித்து பேசிய கவாஸ்கர், யஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்யும்போது, வலுவான இந்திய பேட்டிங் வரிசையில் மூன்று அல்லது நான்கு ஓவர்களுக்கு மேல் உங்களுக்கு கிடைக்காது.
ஆனால், இம்முறை இந்தியா சீக்கிரமாக விக்கெட்டுகளை இழந்ததால், அவர் முன்னதாகவே களத்திற்கு வர வேண்டியிருந்தது. முதல் பந்திலிருந்தே அவர் தன் அதிரடியை காட்டினார். அந்த முதல் பந்து சிக்ஸ் நீங்கள் பார்க்கும் நீண்ட சிக்ஸ்களில் ஒன்றாக இருந்தது, சரியாக இரண்டாவது மாடத்திற்கு சென்றது," எனத் தெரிவித்தார்.
இந்த அதிரடியான ஆட்டத்தில், சிவம் துபே வெறும் 15 பந்துகளில் தனது அரை சதத்தைக் கடந்து சாதனை படைத்தார். இது யுவராஜ் சிங் (12 பந்துகள்) மற்றும் அபிஷேக் ஷர்மா (14 பந்துகள்) ஆகியோருக்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது அதிவேக அரை சதமாகப் பதிவானது. இந்தச் சாதனையைப் பற்றி பேசிய கவாஸ்கர் "அவர் ஒரு ஷாட்டை அடித்தவுடன், அவரது தன்னம்பிக்கை உயரும். ஏனெனில் அவருக்கு அந்த சக்தி, ஸ்விங் மற்றும் சரியான டைமிங் உள்ளது என்பதால், பந்து நிச்சயமாக ஸ்டாண்ட்ஸுக்குள் செல்லும் என்று அவருக்குத் தெரியும்.
யுவராஜ் சிங், அபிஷேக் ஷர்மா ஆகியோருக்குப் பிறகு இப்போது சிவம் துபே என இவர்களுடன் அவர் ஒப்பிடப்படுவது குறிப்பிடத்தக்கது," என்று கூறினார்.துபேவின் அதிரடி ஆட்டம் இந்தியாவுக்கு நம்பிக்கையை அளித்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர் ரன் அவுட் ஆனதால் இந்தியாவின் வெற்றிக் கனவுகள் தகர்ந்தன. இதில் ஆறுதல் வெற்றியை நியூசிலாந்து பதிவுசெய்தது. சிவம் துபேவை ஒரு "சிறந்த மதிப்புமிக்க வீரர்" என்று கவாஸ்கர் பாராட்டினார்.
அவர் வெறும் ஒரு 'ஃபினிஷர்' மட்டுமல்ல. அவர் சில ஓவர்கள் பந்துவீச முடியும் என்பது அவரை ஒரு மதிப்புமிக்க வீரராக ஆக்குகிறது. இந்த முறை அவர் முன்னதாகவே களத்திற்கு வந்ததால், அவர் தன்னை ஒரு ஃபினிஷராக மட்டுமே பார்க்க மாட்டார். குறிப்பாக நெருக்கடியான சூழ்நிலைகளில், ஒரு இன்னிங்ஸை உருவாக்கி முடிக்கவும் தன்னால் முடியும் என்று அவர் நம்புவார்," என்று கவாஸ்கர் தெரிவித்தார்.