அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மிக முக்கிய காரணமாகத் திகழ்கிறார். இந்நிலையில், சஞ்சு சாம்சனை அணியில் சேர்ப்பதற்காகத் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதம் செய்ததாகப் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சோயப் அக்தர், சஞ்சு சாம்சனின் தேர்வு குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். "கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் உள்ளார். ஆனால் தோனி, தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த விக்கெட் கீப்பர்கள் இருந்ததால் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் இம்முறை நிலைமை வேறு. சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என்பதற்காகக் கௌதம் கம்பீர் அனைவரிடமும் சண்டையிட்டுள்ளார். ஆரம்பத்தில் உலகக் கோப்பைத் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால், பயிற்சியாளர் கம்பீரின் கட்டாயத்தின் பெயரிலேயே அவர் அணியில் சேர்க்கப்பட்டார். அவரது தேர்வுக்காகக் கம்பீர் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது" என்று அக்தர் கூறினார். 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை தான் அக்தர் குறிப்பிட்டு இருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகுதான் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசித் தனது திறமையை நிரூபித்தார். இதன் மூலம் தன் மீது நம்பிக்கை வைத்த கம்பீரின் முடிவை அவர் சரியென நிரூபித்துள்ளார்.

இந்தத் தொடரில் வெறும் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 232 ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் உள்ளது. அரையிறுதியில் அவர் அடித்த 89 ரன்கள் மூலம், டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு அரையிறுதியில் விராட் கோலி இதே மைதானத்தில் 89 ரன்கள் எடுத்திருந்தார்.
மேலும், ஒரே உலகக் கோப்பைத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். இந்தத் தொடரில் அவர் இதுவரை 16 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுள்ளார்.
