முதல் ஒருநாள் போட்டி
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது.
இந்தியா பேட்டிங்
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா, ஷிகர் தவான் காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறாத நிலையில், அவர்களுக்குப் பதில் மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா இந்தப் போட்டியில் துவக்க வீரர்களாக தங்கள் முதல் ஒருநாள் போட்டியில் ஆடினர்.
துவக்கம் ஏமாற்றம்
இரு துவக்க வீரர்களும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த போதிலும், குறைந்த ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ப்ரித்வி ஷா 20, மயங்க் அகர்வால் 32 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்தனர்.
கோலி அரைசதம்
கேப்டன் கோலி அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். அவர் சரியாக 51 ரன்கள் எடுத்த நிலையில், இஷ் சோதி பந்துவீச்சில் பவுல்டு அவுட் ஆகி எதிர்பாராவிதமாக வெளியேறினார். ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து நிதான ஆட்டம் ஆடி வந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் சதம்
ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டம் ஆடி அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒரு கட்டத்தில் அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினார். 101 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். அதன் பின் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
முதல் சதம்
இந்த சதம், ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் ஒருநாள் போட்டி சதம் ஆகும். உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக இடம் பெற்று வரும் ஸ்ரேயாஸ் ஐயர் துவக்கத்தில் தொடர்ந்து அரைசதம் அடித்தார். இந்த நிலையில், தற்போது தன் முதல் சதம் அடித்து அசத்தி உள்ளார்.
நான்கு ஆண்டுகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் முதல் சதம் இது தான். அந்த அளவிற்கு சரியான வீரர்கள் அமையாமல் இருந்த நான்காம் வரிசைக்கு நம்பிக்கை அளித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
மனிஷ் பாண்டே சதம்
கடந்த 2016 ஜனவரி 23 அன்று, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் மனிஷ் பாண்டே நான்காம் வரிசையில் களமிறங்கி 80 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியை சேஸிங்கில் வெற்றி பெற வைத்தார். அதன் பின், நான்காம் வரிசை வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வெளிநாட்டில் சதம் அடித்துள்ளார்.
அம்பதி ராயுடு, யுவராஜ் சிங்
மேலும், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அணியில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஒருவர் அடிக்கும் நான்காவது சதம் ஆகும். மனிஷ் பாண்டே அடித்த சதம் போக, யுவராஜ் சிங் மற்றும் அம்பதி ராயுடு இந்திய மண்ணில் நான்காம் வரிசையில் களமிறங்கி சதம் அடித்துள்ளனர்.
இந்தியா ஸ்கோர்
முதல் ஒருநாள் போட்டியில் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 103, கேஎல் ராகுல் 88 ரன்கள் குவிக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயம் செய்தது.