மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் சுப்மன் கில் ஆட்டமிழந்த விதத்தை மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் விமர்சித்துள்ளார். இது குறித்து அஷ்வின், தனது 'X' பக்கத்தில், "இங்கிலாந்தில் ஷுப்மன் ரன்கள் குவித்து வந்தபோது, அவரது பேட் பேடுக்கு மிக அருகில் இருந்தது என்று சன்னி பாய் குறிப்பிடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒருநாள் போட்டிக்கு மாறும் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும் சவால் மற்றும் தானாக நிகழும் மாற்றங்கள் குறித்து விளக்க முயல்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
கில் அவுட்டானதை அஷ்வின் ஸ்லோ மோஷன் காட்சிகளுடன் விளக்கினார். முதல் படத்தில், பல வருட பயிற்சிகளால் உருவான சுப்மன் கில்லின் இயல்பான நிற்கும் நிலையையும், பந்தை நேராக எதிர்கொள்ளத் தயாராகும்போது gully பகுதியில் இருந்து பேட்டை உயர்த்தும் ஒரு தனித்துவமான பாணியையும் அவர் விவரித்தார். இரண்டாவது படத்தில், கில் பந்தின் திசையை மிக விரைவாகக் கணித்து, அதைச் சரியாக சந்திக்கத் தனது பேட்டை சீரமைத்திருப்பதையும், இதன் மூலம் தான் ஒரு சிறந்த பேட்டிங் நிலையில் இருந்திருப்பதையும் அஷ்வின் விரிவாகச் சுட்டிக்காட்டினார்.

ஆனால், பந்து உள்நோக்கித் திரும்பும் அச்சுறுத்தல் இருக்கும்போது, பேட்டுக்கும்,பேடுக்கும் இடையிலான இடைவெளியை மூட, பேட் உள்நோக்கி வளைந்து வர வேண்டியது அவசியம். மூன்றாவது படத்தில், அந்த இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியதையும், பந்து வேகமாக உள்நோக்கித் திரும்பியபோது கில் அபாயத்தை உணர்ந்திருப்பார் என்பதையும் அஷ்வின் தெளிவுபடுத்தினார்.
அந்த நேரத்தில், பெரிய உடல் அசைவுகளுக்குப் பதிலாக நுட்பமான கை அசைவுகள்தான் இந்த சிக்கலுக்குத் தீர்வாக இருந்திருக்கும் என அஷ்வின் தெரிவித்தார். பந்து உள்நோக்கித் திரும்புவதை சரியான நேரத்தில் சமாளிக்க, கில் தனது கீழ் கையின் பிடியைச் சற்றே தளர்த்தி, கைகளை பேடுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று அவர் விளக்கினார். ஆனால், நான்காவது படம், இந்த முக்கியமான சிறு திருத்தம் ஏன் அவர் எதிர்பார்த்த நேரத்தில் நிகழவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியதாக அஷ்வின் குறிப்பிட்டார்.
"உற்று நோக்கினால், நுட்பமான அசைவுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய கீழ் கை தளர்வடையாமலும், கடைசி நிமிட மாற்றத்தை அனுமதிக்காமலும் இருப்பதை நீங்கள் காணலாம்," என்று அஷ்வின் எழுதினார். "கில் அந்த இடைவெளியை மூட விரும்பினாலும், பேட்டின் கைப்பிடியில் உறுதியாகப் பதிந்திருக்கும் அவரது கீழ் கை, ( Back hand bat grip) அதற்கு அனுமதிக்கவில்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"இது இப்போது நிகழ்ந்த ஒரு சம்பவம், ஆனால் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியபோது இந்தச் சிக்கலை அவர் சரிசெய்தார்" என்று அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் கவலைக்குரியதோ அல்லது நிரந்தரமானதோ அல்ல என்பதையும் அஷ்வின் வலியுறுத்தினார்.
இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் 145 ரன்கள் குவித்த கில்லை, 'அற்புதமான வீரர்' என்று அஷ்வின் பாராட்டினார். குறிப்பாக, ஆட்ட வடிவங்களை மாற்றும்போது ஏற்படும் சில கணங்களின் கவனக்குறைவு காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.