வடோரா: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அரை சதம் அடித்திருக்கிறார். சொந்த மண்ணில் ஒரு நாள் கிரிக்கெட்டில் கேப்டனாக முதல் அரை சதத்தை அடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணி 301 ரன்கள் என்ற வெற்றி இலக்கை ஆறு விக்கெட்டுகளை இழந்து 49 வது ஓவர் இறுதியில் எட்டியது.
இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் கில், இதுபோன்ற ஒரு சேசிங்கில் நானும் சிறிது பங்களிப்பு அளித்து இருக்கின்றேன் என்று நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு விளையாட்டு வீரராக நான் எப்போதுமே நிகழ்காலத்தில் இருப்பதையே விரும்புகின்றேன்.

நம் முன் என்ன இருக்கிறதோ, அதில் மட்டும்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த சூழலில் நாம் என்ன செய்ய வேண்டுமோ, அதை தான் செய்ய வேண்டும். இதன் மூலம் கிரிக்கெட்டில் கிடைக்கும் மகிழ்ச்சியையும், ஏமாற்றத்தையும் நம்மால் கையாள முடியும். இதை தான் நான் செய்கின்றேன்.
விராட் கோலி விளையாடும் விதத்தால் ஒரு கேப்டனாக என்னுடைய பணி எளிதாகி விடுகிறது. இது போன்ற ஆடுகளத்தில் கூட இன்னிங்சை கட்டமைப்பது என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் சவாலாக இருக்கின்றது. ஆனால் விராட் கோலி அனைத்தையும் எளிதாக மாற்றி விடுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே அதிக அளவு சிங்கிள்ஸ் எடுத்து விளையாட வேண்டும்.
கடந்த தொடரில் ஆர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் நன்றாக செயல்பட்டார். அப்போது சிராஜ் அணியில் இல்லை. தற்போது சிராஜ் அணியில் இருக்கின்றார். நாங்கள் உலககோப்பை க்கு முன்பு அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்க முயற்சி செய்கின்றோம். 50 ஓவர் உலகக் கோப்பை காண அணியை நாங்கள் கட்டமைக்க முயற்சி செய்கின்றோம்.
தற்போது பெரிய அளவு ஒரு நாள் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் பொருத்தவரை அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. காயத்தின் அளவு எவ்வாறு இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய உள்ளோம். அதன் முடிவுகள் கிடைத்த பிறகு தான் அவர் இந்த தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார்.