புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சரியாக பந்து வீசவில்லை என்பதால் தான் மற்றொரு ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரை இந்தியா தேர்வு செய்து இருக்கிறதா? என முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் கேள்வி கேட்டு சீண்டி இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. கே எல் ராகுல், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், ஆகாஷ் தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இதில் கே எல் ராகுல் மற்றும் முகமது சிராஜ் சரியாக செயல்படாததால் அவர்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் எந்தத் தவறும் செய்யாத குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அது குறித்து முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் கேள்வி எழுப்பி இருக்கிறார். "முதல் டெஸ்ட் தோல்வியால் இந்தியா பதற்றம் அடையவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால், இந்த முடிவு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த தொடருக்கு முன், "வீரர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களது திறமையை நம்ப வேண்டும்." என்றார்கள். ஆனால், திடீரென ஒரு போட்டியில் ஒரு வீரர் நன்றாக விளையாடவில்லை என்றால் அவரை அணியிலிருந்து நீக்குகிறார்கள்." என இந்திய அணியில் செய்யப்பட்ட மாற்றத்தை விமர்சனம் செய்தார் சைமன் டல்.
மேலும், "வாஷிங்டன் சுந்தர் உள்ளூர் போட்டியில் ரன்கள் அடித்தவுடன் நேரடியாக பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கிறார். அப்படி என்றால் அஸ்வின் மீது இந்திய அணியின் நிர்வாகத்துக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறதா? அதனால் தான் மற்றொரு ஆஃப் ஸ்பின்னரை அவர்கள் அணியில் சேர்த்து இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதேபோல சுனில் கவாஸ்கர் இந்திய அணி பந்து வீச்சை விட பேட்டிங் தான் முக்கியம் என முடிவு செய்து குல்தீப் யாதவை நீக்கி விட்டு வாஷிங்டன் சுந்தரை சேர்த்து இருப்பதாகவும், வாஷிங்டன் சுந்தரின் பவுலிங்கை விட, அவரது பேட்டிங் தான் இந்திய அணிக்கு இப்போது முக்கியமாக இருக்கிறது எனவும் விமர்சனம் செய்து இருக்கிறார்.